தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு வளையத்தில் ஆர்.கே. நகர் - 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ரோந்து
தேர்தல் ஆணையத்தின் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் ஆர்.கே. நகர் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுப்பாடா, கலவரம் என நிலைமை பதற்றமாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் ஆர்.கே. நகரில் ஏராளமான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நுண்பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் ரோந்து, சிசிடிவி கண் காணிப்பு என ஆர்.கே.நகர் தேர்தல் களம் படு பரபரப்பாக உள்ளது.
கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே. நகர்
புகார்கள் அதிக அளவில் வருவதால், சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சென்னை வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தலை நேர்மையாக நடத்தியே ஆகவேண்டும் என்று தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் ஆர்.கே. நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
ஆர்.கே நகர் பகுதி முழுவதும் மாநகர காவல்துறையினரும் துணை ராணுவ வீரர்களும் இணைந்து அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே செல்வதற்கு அனுமதிக்கின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சக்கர வாகனங்கள்
ஆர்.கே.நகரில் அதிக அளவில் பணப்பட்டுவாடா புகார்கள் வரு வதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல்முறையாக நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு பேர் பயணம் செய்து 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவப்படையினர் ரோந்து
ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரை மாநில காவல் துறையினர் எண்ணிக்கையைவிட துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான சூழ்நிலை
பிரச்சாரத்தில் ஒருப்பக்கம் அனல் பறக்கிறது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு, இருசக்கர வாகன ரோந்து, துணை ராணுவப்படையினரின் ரோந்து என படு பரபரப்பாகவும், பதற்றமாகவும் உள்ளது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம்.