அங்க டெல்லியில் பேச்சுவார்த்தை! இங்க நடுக்கடலில் இலங்கை மீண்டும் அட்டூழியம்- 10 மீனவர்கள் கைது!
டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் 10 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை.
சென்னை: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் நடுக்கடலில் 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் 30 ஆண்டுகால அட்டூழியத்துக்கும் படுகொலைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதை இலங்கை கடற்படை நிறுத்தி வைத்தது.
அண்மையில் 22 வயது ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்தது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் தமிழக மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இப்படி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்ற நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.
கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.