120 வருட பழமையான 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.. பொருட் சேதம் மட்டுமே.. உயிரிழப்பு இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாந்தோம் பகுதியில் 120 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான 2 மாடி குடியிருப்புக் கட்டடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் வீட்டுக்குள் யாரும் இல்லாததால், காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பொருட் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மழை எப்போது வரும் என்பது தெரியவில்லை. ஆனால் வந்தால் நன்றாக நின்று பெய்து விட்டுப் போகிறது.

இந்த மழையால் சரிவர கட்டப்படாத கட்டடங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.

ஜூன் 28ம் தேதி மவுலிவாக்கத்தில் 11 மாடிகளைக் கொண்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து நொறுங்கியதில் 61 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். அதேபோல திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிதாக கட்டப்பட்ட கிட்டங்கி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 கட்டுமானத் தொழிலாளர்கள் அநியாயமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சென்னை சாந்தோம் பகுதியில் கன மழையால் 120 வருட பழமையான 2மாடி வீடு இடிந்து விழுந்துள்ளது. நல்லவேளையாக அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்போ, காயமோ இல்லை.

சாந்தோம் சலீவன் தெருவில், 120 ஆண்டு கால பழமையான 2 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமானதாகும். இந்த 2 மாடிக் கட்டிடத்தில், தரைத்தளத்தில் 2 வீடுகளும், முதல் தளத்தில் 2 வீடுகளும் இருந்தன. இந்த 4 வீடுகளும் குறைந்த வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

பழமையான கட்டிடம் என்பதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் இந்த கட்டிட சுவர்களில் ஆங்காங்கே அரசமரக்கன்று முளைத்திருந்தது. சிறு சிறு விரிசல்களும், ஏற்பட்டு சுவர்கள் பெயர்ந்தும் இருந்தது. இதையடுத்து
சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபை சார்பில், இங்குள்ள 4 வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், கட்டிடம் சிதிலம் அடைந்திருப்பதால் வாழ தகுதியில்லாத நிலையில் இருக்கிறது. எனவே, 4 குடும்பத்தினரும் 3 மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொருவராக வீட்டை காலி செய்யத் தொடங்கினார்கள். ஆனால், ஜான்சி (32) என்பவர் மட்டும் தனது மகன் நவீன் (5) உடன் தரைத்தளத்தில் வசித்து வந்தார். ஜான்சி மயிலாப்பூர் கல்யாணி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் நவராஜன் ராணுவத்தில் பணியாற்றுகிறார். ஹைதராபாத்தில் பணியில் உள்ளார்.

முதல் மாடியில் இருந்த ஞான ஒளி குளோரி என்பவர், வீட்டை விட்டு சென்றுவிட்டாலும், பொருட்களை அங்கேயே வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை ஜான்சி, வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். மகன் நவீனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர் வீட்டில் இருந்தார். 10.30 மணியளவில் முன்புறம் வாசலை சுத்தம் செய்வதற்காக அவர் வந்தார். அப்போது, அவர் வசித்த வீட்டின் பின்பகுதி, திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மாடி மற்றும் பின்புற அறைகள் இடிந்து தரைமட்டமானது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் திரண்டனர். போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் போனது. வீட்டுக்குள் யாரும் போகாதவண்ணம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. வீட்டுக்குள் யாரும் சிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அங்கு கூடியவர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இடிந்த கட்டடத்தின் முன்பகுதிக்கு சீல் வைத்தனர். அங்கு வந்த சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த அதிகாரிகளும் இரவோடு இரவாக கட்டடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி விடுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த 2 மாடி கட்டடத்திற்கான மின் இணைப்பை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இதைத் தொடர்ந்து இரவில் அந்தக் கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது.

இந்த வீட்டில் குடியிருந்து வந்த ஜான்சி இன்னும் 3 மாதங்களில் வீட்டைக் காலி செய்யத் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டது. இந்த வீட்டு குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாதம் ரூ. 1500 வாடகை கொடுத்து வந்தனர். மிகவும் குறைந்த வாடகை என்பதால் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் தொடர்ந்து வசித்து வந்துள்ளனர்.

ஆனால் கட்டடம் மிகவும் சிதிலமடைந்த நிலைக்குப் போனதால் திருச்சபையினர் அனைவரையும் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் காலி செய்து வந்த நிலையில் ஜான்சி மட்டும் தாமதப்படுத்தி வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+