முடிந்தது வேட்புமனுத் தாக்கல்... தமிழகம், புதுவையில் 1359 பேர் மனுத்தாக்கல்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு சுமார் 1,359 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நாளை தொடங்கி மொத்தம் 9 கட்டங்களாக வரும் மே 12ம் தேதி வரை நடைபெற உள்ளது 16வது லோக்சபா தேர்தல். இதில் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஒரே நாளில் வருகிற 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே, காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்டது லோக்சபா. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நேற்றோடு முடிந்த வேட்புமனுத் தாக்கலின் படி, இந்த 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுமார் 1359 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல்....
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆகிய இரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
கடைசி நாளில் மட்டும் 560 பேர்....
நேற்று முன்தினம் வரை 758 வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 560 பேர் மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும்....
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது மனுத்தாக்கல். இறுதி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,318 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
இரண்டு திருநங்கைகள்...
இவர்களில் 1,198 பேர் ஆண்கள். 118 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள் ஆவர். புதுச்சேரியில் மட்டும் சுமார் 41 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நாளை பரிசீலனை...
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அப்போது தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வாபஸ் பெற கடைசிநாள்...
அதேபோல், போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 9-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இறுதிப்பட்டியல்...
அன்று மாலை 3 மணிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும்.
ஓட்டு எண்ணிக்கை...
அதன்பிறகு 24-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.