4 நாட்களில் 3.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்த 134 நடமாடும் மருத்துவமனைகள்
சென்னை: 134 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கடந்த 4 நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களில் 3.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தொற்று நோய் பரவாமல் இருக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்களில் பங்கேற்க பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து மருந்துகள் அடங்கிய வாகனங்கள் அதாவது நடமாடும் மருத்துவமனைகளில் வந்துள்ளனர்.
நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் 3.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், நாப்கின்கள் வழங்கும் பணியையும் நடமாடும் மருத்துவமனைகள் செய்து வருகின்றன.
நடமாடும் மருத்துவமனைகளை ஆய்வு செய்த தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் வடிவேலன் மற்றும் நோய் தடுப்புத் துறை இணை-இயக்குனர் டாக்டர் சி.சேகர் கூறுகையில்,
போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் இருக்கும் 42 சுகாதார மாவட்டங்களில் இருந்து 134 நடமாடும் மருத்துவமனைகளுடன் டாக்டர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவ 500 கிராம செவிலியர்களும் வந்துள்ளனர். 10 நடமாடும் மருத்துவமனைகள் அவசர தேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறது.
காய்ச்சல், சளி மாத்திரைகள், இருமல் டானிக், வைட்டமின் மாத்திரைகள், எலிக்கடி மருந்து, சேத்துப்புண்ணுக்கான களிம்பு, தோல் நோய்களுக்களுக்கான் மருந்துகள் அளிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை, ரத்த கொதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கு தேவையான நாப்கின்கள் கர்நாடக மாநிலம் பெல்காம், வேளச்சேரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 1, 508 பெட்டிகளில் 15 லட்சம் நாப்கின்கள் வந்துள்ளன. அவை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications