தீபாவளி... பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 19 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி (பெர்மிட்) இல்லாமல் இயக்கப்பட்ட 19 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு அலை அலையாக போய்க் கொண்டுள்ளனர்.
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விடாமல் இருக்க, போக்குவரத்து துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.
சென்னையில் 6 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேடு, அரும்பாக்கம், பெருங்களத்தூர், எழும்பூர் ஆகிய இடங்களில் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 19 பேருந்துகள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்துகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து ஆம்னி பஸ்கள் மீதான சோதனை நடந்து வருகிறது.
இதேபோல், தீபாவளி முடிந்து நாளை மறுதினம் (11-ம் தேதி) சென்னை திரும்பும் ஆம்னி பேருந்துகளையும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னையை சுற்றியுள்ள சுங்க சாவடிகளில் இந்த சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 24794709 எண்ணிலும், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலக எண்கள் 044-26744445, 24749001 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.