1989-ல் தமிழக சட்டசபையில் வரலாறு காணாத வன்முறைக்கு வித்திட்ட ‘சோபன் பாபு’! Flashback
Recommended Video
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது; அக்குழந்தையின் தந்தை தெலுங்கு நடிகர் சோபன் பாபு என ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் செய்தியை ஜெயலலிதாவின் உறவினர்களே தற்போது பகிரங்கப்படுத்தி உறுதி செய்து வருகின்றனர். இதே சோபன் பாபுவால்தான் தமிழக சட்டசபை வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது என்பதும் சரித்திரம்.
எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த ஜெயலலிதா மாற்றப்படுகிறார். 1970களின் தொடக்கங்களில் மஞ்சுளா, லதா என ஹீரோயின்கள் எம்ஜிஆர் படங்களில் இடம்பிடிக்கிறார்கள்.
அப்போது ஜெயலலிதாவின் திரை உலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 1973-ல் தெலுங்கு படங்களில் தலைகாட்டுகிறார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது; ஜெயலலிதா ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் என சேதிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
குமுதம் தொடர்
இந்த நிலையில் 1978-ல் தமிழகத்தில் ஜெயலலிதா புயல் மீண்டும் வீசுகிறது. குமுதம் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரும் அவர் கொடுத்த விளம்பரமும் பெரும் பரபரப்பை கிளப்பின. அதில்தான் தானும் நடிகர் சோபன் பாபுவும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இருப்பதால் தனி வீட்டில் ஒன்றாக இருப்பதாகவும் ‘கோயிங் ஸ்டெடி' எனவும் பகிரங்க பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா. அத்துடன் சோபன் பாபுவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
மீண்டும் எம்ஜிஆர்-ஜெ.
அதே காலகட்டத்தில் தெலுங்கு சினிமா இதழில் சோபன் பாபு- ஜெயலலிதா இணைந்து இருக்கும் படங்களும் வெளியாகின. பின்னர் 1981-ல் எம்ஜிஆருடன் ஜெயலலிதா மீண்டும் நெருக்கமாகி அரசியலுக்குள் நுழைந்தார். சரி இந்த வரலாறுக்கும் தமிழக சட்டசபை வன்முறைக்கும் என்னப்பா தொடர்பு?
ஜெ. சேலை கிழிப்பு
ஆம் 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி... தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் போது வரலாறு காணாத வன்முறை வெடித்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் முகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் குத்தினர்.. ஜெயலலிதாவின் சேலை துகிலுரியப்பட்டதாக கூறப்பட்டது.
சோபன்பாபுவிடம் போய் கேள்
இத்தனைக்கும் காரணம் முதல்வர் நாற்காலியில் இருந்த கருணாநிதி சொன்ன ஒரு வார்த்தைதான்... அப்படி என்னதான் கருணாநிதி சொன்னார். இந்த சம்பவத்தை மூத்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர், டெலிகிராப் நாளேட்டில் இப்படி பதிவு செய்கிறார் 1989-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருந்தது. 1989- மார்ச் 25-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் சட்டசபையில் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, கருணாநிதியின் ராஜினாமாவை வலியுறுத்தி பேசினார். அப்போது கருணாநிதி ஜெயலலிதாவைப் பார்த்து "போய் சோபன்பாபுவிடம் கேள்" என கூறினார். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் பேப்பரை கிழித்து முகத்தில் குத்துவிட்டனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு ஜி.சி. சேகர் பதிவு செய்கிறார்.
ஜெ. வின் விளக்கம் இது
ஆனால் அதே நாளில் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி தம்மை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக மட்டும் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.