100 நாள் வேலை திட்டத்தில் தோண்டியெடுத்த சிறுமி சடலம்.. இருவர் கைது.. விசாரணையில் பகீர் தகவல்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்காக குழித் தோண்டும் போது இளம் பெண்ணின் சடலம் கிடைத்த நிலையில் அந்த பெண் 17 வயது சிறுமி என்பதும் அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் காதலன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்கள் நிறைய பேர் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு இவர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு இளம் பெண்ணின் அழுகிய நிலையில் ஒரு உடல் இருந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கஞ்சனூர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.

உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இறந்த இளம்பெண் யார், இவரை கொன்று புதைத்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனரா என்றும் விசாரித்து வந்தனர்.
செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். குறிப்பாக 25 வயது முதல் 30 வயதிற்குள் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அந்த பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அந்த பெண்ணிற்கு 17 வயது முதல் 19 வயது இருக்கும் என போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியை சேர்ந்க பிளஸ் 1 படித்து வந்த மாணவி என தெரியவந்தது.
அவரை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் சென்னையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரை மடக்கிபிடித்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார்.
அவர் அந்த மாணவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதற்கு அவருக்கு கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணியின் மகன் சுரேஷ் குமார் (22) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகின.

அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அது போல் அந்த மாணவியின் உறவினர் வீடும் அங்குதான் உள்ளது. இருவரும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால் அகிலன் அந்த மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை மாணவியின் பெற்றோர் கண்டித்தும் அதை கேட்காமல் அவருடன் அந்த மாணவி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறும் அகிலனிடம் அந்த மாணவி வலியுறுத்தியுள்ளார். இதனால் சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று கொன்று புதைத்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications