வரலாறு பேசும் 25 நாட்கள் நாடகத்தின் பர்ஸ் பார்ட் நிறைவு!
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை சசிகலா தொடங்கி வைத்திருக்கிறார். தொண்டர்களின் கடும் எதிர்ப்புக்கு நடுவே அதிமுகவின் புதிய பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா.
சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார் "அதிமுக பொதுச்செயலாளராகி"விட்ட சசிகலா... இந்த அடைமொழிக்காக கடந்த 25 நாட்கள் நடத்தப்பட்ட நாடகத்தை நினைத்துப் பார்த்ததால் அடடே! என்றுதான் நகைக்க முடியும்.
டிசம்பர் 5... ஜெயலலிதா மறைந்தார் என முதலில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின... தமிழகமே ஸ்தம்பித்தது... திடீரென தீவிர சிகிச்சை... கவலைக்கிடம் என அடுத்தடுத்து மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டது. நேரம் கடந்து போய் நள்ளிரவானது..
ஊரே அடங்கிப் போன நிலையில் ஜெயலலிதா காலமாகிவிட்டதாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.. அதே நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா உடல் அப்பல்லோவில் இருந்தபோது ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக முதல்வராக பதவியேற்றார்.. அமைச்சர்களும் நிசப்தமாக பதவியேற்றனர்.

துரோகிகள் கூட்டம்
ஜெயலலிதா சிறைக்குப் போனதற்கே கதறி கூப்பாட்டு போட்டு பதவியேற்ற அமைச்சர்கள் அந்த ஆளுமை மறைந்தபோன துயரம் எதுவுமில்லாமல் பதவியேற்றது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.. ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போது அதிமுகவின் தொண்டர்களுக்கு துரோகிகள் என அடையாளம் காட்டப்பட்ட கும்பல் ஆதிக்கம் செலுத்தியது.

சமாதியிலேயே..
அமைச்சர்கள் 'மகிழ்ச்சியோடு' தரையில் அமர்ந்து அரட்டையடித்த கொடுமையை கண்டு அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போனார்கள்.. ஜெயலலிதா உடல் அன்றே அடக்கம் செய்யப்பட ஊமையாகிப் போனார்கள் அதிமுகவினர்.. அவ்வளவுதான் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுகவின் எதிர்காலத்தைப் பற்றி அவர் புதைக்கப்பட்ட இடத்திலேயே பேசினார் அதிமுகவின் துரோகி என ஜெயலலிதாவால் சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடராசன்.

சின்னம்மாவான சசிகலா
பின்னர் போயஸ் தோட்டத்தில் அடுத்த கட்ட காட்சிகள் ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே தொடங்கிவிட்டது. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி.கே. சசிகலா புதிய ஜெயலலிதாவாக உருவகப்படுத்தப்பட்டார். வி.கே. சசிகலா என்ற பெயர் ராசியில்லையோ என்னவோ சின்னம்மாவாக்கப்பட்டார்..... ஜெயலலிதா பெரியம்மாவானார்..

துணைவேந்தர்களும்...
நாள்தோறும் போயஸ் தோட்டத்துக்கு லெட்டர் பேடு சங்கங்கள், அதிமுக நிர்வாகிகள் வரவழைக்கப்படுவதும் அவர்கள் அனைவருமே "சின்னம்மா" பொதுச்செயலராக வேண்டும் என கெஞ்சுவதுமாக காட்சிகள் நகர்ந்தன... இந்த தொண்டரடிப் பொடிகள் பட்டியலில் துணைவேந்தர்களும் இணைந்து கொண்டதுதான் அதிர்ச்சியாக இருந்தது...

பொதுச்செயலராக...
இந்த நாடகத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சிகள்தான் இன்று பொதுக் குழுவிலும் போயஸ் கார்டனிலுமாக நடத்தப்பட்டது. இன்றைய காலை காட்சி பொதுக்குழுவில் தொடங்கியது. ஜெயலலிதா இறந்த சில நிமிடத்திலேயே சலனமின்றி பதவியேற்றவர்கள் கண்ணீரை இன்று கசியவிட்ட அடடே! காட்சியும் இதில் அடங்கியது... ஒருவழியாக சின்னம்மா சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதாக முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கண்ணீர் மல்க...
இத்தீர்மானத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் போயஸ் கார்டனில் சசிகலாவிடம் கொடுத்தனர்.. ஜெயலலிதா உடல் வைக்கப்பட்ட இடத்தில் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த சசிகலா இன்று ஏதோ கண்ணீர் கசிய ஜெயலலிதா படத்தை தொட்டு தொட்டு வணங்கி 'பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட' தீர்மானத்தை வாங்கினார். பின்னர் பணிவுக்குப் பெயர் போன முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு சின்னம்மா அதிமுகவின் பொதுச்செயலராக சம்மதித்துவிட்டார் என அறிவித்தார். இந்த தகவலை வானகரத்தில் உள்ள பொதுக்குழுவுக்கு தெரிவிக்கப்பட உடனே அந்த கூட்டம் முடிவுக்கு வந்ததாம்.

தொண்டர்கள் கொந்தளிப்பு
இனி அதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா என்பதை பிரகடனம் செய்துவிட்டனர். இந்த பிரகடனத்துடன் நாடகத்தின் முதல் காட்சி முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை ஏற்க மறுத்தும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இத்தனைக்கும் அதிமுக எனும் பேரியக்கத்தின் விசுவாசமிக்க தொண்டர்கள்தான் கொந்தளித்து போராடுகின்றனர்.

ஆட்சியும் மாண்புமிகு சின்னம்மாவுக்கே..
நாடகத்தின் அடுத்த கட்டம், ஆட்சியும் மாண்புமிகு 'சின்னம்மா'விடமே தாரை வார்ப்போம்' என்ற முழக்கத்துடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலேயே தொடங்கும்.. அந்த காட்சியையும் காண தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது மக்களே!












Click it and Unblock the Notifications