வேலையை காட்டியது ராஜபக்சே கடற்படை! ஒரே நாளில் 33 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது!!
ராமேஸ்வரம்: மத்தியில் புதிய அரசு பதவியேற்று சில நாட்களிலேயே இலங்கை அரசு தமது அட்டூழியத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது. மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை ஒரே நாளில் சிறைபிடித்து வெறியாட்டம் போட்டிருக்கிறது ராஜபக்சே கடற்படை.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது.
இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நல்லெண்ண நடவடிக்கையாக தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்தது.
இதனால் இந்தியாவும் ஆந்திரா, ஒடிஷா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அத்துடன் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் டெல்லியில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மீன்பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது.
தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசியது. அவர்களின் மீன்களைக் கொள்ளையடித்து. ஒரே நாளில் மட்டும் மொத்தம் 33 தமிழக மீனவர்களை தாக்கி சிறைபிடித்து சென்றிருக்கிறது ராஜபக்சேவின் கடற்படை.
மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளது இலங்கை கடற்படை. இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதாக நாடகமாடிவிட்டு வேலையை காட்டியிருக்கிறது ராஜபக்சே கடற்படை என்பது தமிழக மீனவர்களின் குமுறல்.
புதிய மத்திய அரசு ஆட்சிக் காலத்திலும் தங்களது துயரம் தொடர்வது கண்டு தமிழக மீனவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.