சென்னை 11 மாடி கட்டிட விபத்து: 60 மணி நேரத்திற்குப் பின் மூவர் உயிருடன் மீட்பு
சென்னை: சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமான இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பின் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமையன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புக்குழுவினர் தீவிரம்
சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சேர்ந்த 400-க்கு மேற்பட்டவர்கள் அடங்கிய 10 மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
உயிருடன் மீட்பு
இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து ஆந்திராவை சேர்ந்த மகேஷ் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தன்னுடைய மனைவியும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறினார். அவர் உயிருடன் இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்கவேண்டும் என்று கூறிவிட்டு மயக்கமடைந்துவிட்டார்.
மேலும் இருவர் மீட்பு
மேலும் தமிழகத்தை சேர்ந்த செந்தில், ஆந்திராவை சேர்ந்த அனுசூர்யா ஆகியோர் பேரிடர் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கபட்டனர். இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
24 பேர் உயிருடன் மீட்பு
இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரையும் முழுமையாக மீட்கும் வரை மீட்பு பணிகள் நிறுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.