கடலூரை தொடர்ந்து.. ஆரணி பேரூராட்சியில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.. குழந்தையுடன் கணவர் தர்ணா
பெரியபாளையம்: பெரியபாளையத்தை அடுத்த ஆரணி பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 3 பெண் கவுன்சிலர்கள் காரில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றிருந்தனர். திமுக 3 வார்டுகளையும் அதிமுக, காங்கிரஸ் தலா ஒரு வார்டையும் கைப்பற்றியிருந்தன.
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து 4 சுயேச்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். இதனால் ஆரணி பேரூராட்சியில் திமுகவின் பலம் அதிகரித்தது.
நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளை அள்ளிய சுயேட்சைகள்...எப்படி தெரியுமா?
ஆரணி பேரூராட்சி தலைவர்
இன்று காலை நடந்த ஆரணி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 7ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது 3ஆவது வார்டு சுயேச்சை உறுப்பினர் பிரபாவதி, 12 ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் சந்தானலட்சுமி, 13 ஆவது வார்டு திமுக உறுப்பினர் பொன்னரசி ஆகிய 3 பேரையும் காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா
இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த பிரபாவதியின் கணவர் சேஷாராவ் தனது 3 வயது குழந்தையுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மனைவியை உடனடியாக மீட்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
பேச்சுவார்த்தை
அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். காரில் கடத்தி செல்லப்பட்ட 3 பெண் கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு 10 ஆவது வார்டு திமுக உறுப்பினர் கண்ணதாசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 கவுன்சிலர்கள்
கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட முயற்சித்தவரின் கணவர், திமுகவின் 23 கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். நேற்று இரவே 23 கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தால் கடலூர் திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.