கூடங்குளம்: அணு உலைக்கு எதிராக உதயகுமார் காலவரையற்ற உண்ணாவிரதம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கூடங்குளத்தில் 1 மற்றும் 2வது அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல்களும், குளறுபடிகளும் நிறைந்திருக்கிறது. இதன் உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகள் பரிசோதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச பரிந்துரைகளை அமுல்படு்தப்பட்டிருக்கின்றனவை என்ற தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். குற்ற சாட்டுகள் உண்மை என்று தெரிந்தால் 2 அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும்.
கூடங்குளத்தில் மேலும் 3,4வது அணு உலைகள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தென் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராளிகளும் கடந்த 900 நாட்களாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை மத்திய அரசோ, அரசியல் கட்சிகளோ பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
தமிழக அரசும் தனது நிலையை மாற்றி கொண்டு விட்டது. இந்த நிலையில் கூடங்குளத்தில் 3,4வது அணு உலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என அணு சக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் அணு மின் நிலையம் பற்றியும், தமிழர் நலம் பற்றியம் கவலைப்படவில்லை. எங்களோடு கைகோர்த்து போராடிய மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாமக, மமக போன்ற கட்சிகளும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் கூடங்குளம் பிரச்சனை பற்றி பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் 31ம் தேதியான இன்று முதல் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகிறோம் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.