தூத்துக்குடி அருகே மாயமான 4 மீனவர்களும் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான 4 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் அந்தோணியர் கோவில் தெருவைச் சேர்ந்த கவாஸ்கர், விஜயபாஸ்கர், செல்வின், வாசு ஆகிய 4 பேரும் ஒரு பைபர் படகில் கண்வாய் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்று அதிகாலை வரை மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களை தேடி மற்ற சக மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
இந்த நிலையில், மாயமான மீனவர்கள் 4பேரையும் கூந்தன்குழி பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் பகுதி மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க கட்டி அணைத்து வரவேற்றனர்.
படகு பழுதின் காரணமாக மீனவர்கள் திசைமாறியுள்ளனர், படகில் பாய்மரமும் இல்லாத காரணத்தினாலே இந்த வழிமாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னாக தகவல் கேள்விப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட மீனவ குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள்'ஸ்டிரைக்
இதற்கிடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தைதொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள், 18 பேர், டிச., 29ல், மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்த இவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி, டிச., 31 முதல், படகுகளில் கருப்புக்கொடி கட்டி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில், மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.