அ.தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்... தள்ளாடும் தமிழகம்: விஜயகாந்த்
சென்னை: அரசின் குறைபாடுகளை மறைத்திடவே நாள் தோறும் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகள் வெளியிடுவதாக தேமுதக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது என்றும் விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? தமிழக மக்களின் நிலை என்ன? ஆட்சியை பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் துளியும் சிந்திக்காமல் சட்டமன்றத்திற்கு வருவதும் 110 விதியின்கீழ் பத்து நிமிடம் அறிக்கை படிப்பதும், அதற்கு பக்க வாத்தியமாக பதினைந்து நிமிடம் அதிமுக உறுப்பினர்கள் பாராட்டிப் புகழ்வதுமென இருப்பதையே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படியெல்லாம் தமிழக மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்ற முடியாது.
தமிழ்நாட்டில் அதிமுக அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ரூபாய் 1 லட்சம் கோடியாக கடன் இருந்தது. ஆனால் தற்போது 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாயாக கடன்தொகை உயர்ந்துள்ளது.
மேலும் அரசு போக்குவரத்து துறையிலும், மின் வாரியத்திலும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கும் அதிகமாக கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகமொத்தத்தில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் சுமை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது.
மேலும் புதிய பென்ஷன் திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளத்தில் பத்து சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே பத்து சதவிகிதம் அரசின் மூலமும் வழங்கப்பட்டு மொத்தம் இருபது சதவிகித சம்பளம் சேமிப்பாக வைக்கப்படும். ஆனால் தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசின் "ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையத்திடம்" ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அ.தி.மு.க. அரசின் மீது வைக்கப்பட்டுள்ளது.
அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது தாங்கள் பென்ஷன் பெறுவதில் மிகப் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடுமோ என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையெல்லாம் மறைத்திடவே தினந்தோறும் 110 விதியின் கீழ் அறிவிப்புகளும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் முதல்வர் ஜெயலலிதா நடத்துகிறார். மேலும் புதிய திட்டங்கள் தொடங்குவது போலவும், ஆலோசனையும், ஆய்வும் நடத்துவது போலவும், தினம் ஒரு புகைப்படமாக பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்து விளம்பரம் தேடிக் கொண்டு, மக்களை ஏமாற்றும் வகையில் வெற்று அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிடுவதாகவே தோன்றுகிறது.
கடந்த நான்கு ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளே நடை முறைக்கு வராத போது மீண்டும் அதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது தமிழக மக்களை ஏமாளிகளாக கருதி அ.தி.மு.க. அரசு ஏமாற்றுவதாகவே தெரிகிறது.
"பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு, இன்றோடு போகட்டும் திருந்திவிடு" என்ற புரட்சித்தலைவரின் பாடல்வரிகளை மனதில் கொண்டு இருக்கின்ற காலத்திலாவது மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை செய்திட அ.தி.மு.க. அரசு முற்படவேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications