ஜல்லிக்கட்டு வன்முறை.. போலீசுக்கு எதிராக சென்னையில் 515 புகார்கள்.. நீதிபதி ராஜேஷ்வரன் தகவல்
ஜல்லிக்கட்டு வன்முறையில் போலீசுக்கு எதிராக சென்னையில் அதிக அளவில் 515 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெரினா கலவரம் குறித்து சென்னையில் 515 புகார்கள் போலீசாருக்கு எதிராக வந்துள்ளதாக விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
4 மாதம் கால அவகாசம்
இந்த விசாரணை குறித்து நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் விசாரித்து முடிக்க கூடுதலாக 4 மாதம் தேவைப்படுகிறது. கால அவகாசம் தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
சென்னையில் போலீசுக்கு எதிராக 515 புகார்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து இதுவரை 1,949 பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் சென்னையில் இருந்து 515 புகார்கள் போலீசாருக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளன.
கோவையில் விசாரணை
அடுத்த மாதம் 16 மற்றும் 17ம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை நடைபெற உள்ளது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம்.
மதுரை, சேலத்தில் விரைவில்
அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் சேலத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இங்கெல்லாம் விரிவான விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கமிஷன் தலைவர் ராஜேஷ்வரன் கூறினார்.
கால தாமதம்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முழு விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரித்து முடிக்க மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.