5 ஆண்டுகளாக பதவியில் நீடித்த 7 அமைச்சர்கள்.. ஜெ. ஆட்சியில் இப்படியும் ஒரு சாதனை
சென்னை: அமைச்சரவை மாற்றத்திற்கு பெயர் பெற்ற ஜெயலலிதா அமைச்சரவையில் கூட ஐந்து வருடங்களாக 7 அமைச்சர்கள் துறை மாற்றமின்றி, அமைச்சர்களாக தொடர்ந்து 'சாதனை'படைத்துள்ளனர்.
2011ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைந்த பிறகு, வழக்கம்போல காரணம் சொல்லாமலேயே, அவ்வப்போது அமைச்சர்களை மாற்றி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை சென்றபோது, அமைச்சரவை தானாகவே கலைந்தது. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை உருவானது.

விருப்பமில்லாத மாற்றம்
ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்த பிறகு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, மற்றொரு அமைச்சரவை உருவானது. இப்படியாக ஜெயலலிதாவின் விருப்பமின்றி 2 முறை அமைச்சரவை மாறியது.

7 பேர் நங்கூரம்
எல்லாவற்றையும் சேர்த்தால், ஜெயலலிதா அமைச்சரவை 19 முறை மாற்றப்பட்டுள்ளது. இப்படி அமைச்சர்கள் காரணம் சொல்லாமல், பந்தாடப்பட்டாலும், 7 அமைச்சர்கள் மட்டும் நங்கூரம் போட்டு அமர்ந்திருந்தது ஆச்சரியம்தான்.

ஓபிஎஸ் முதல் பழனியப்பன் வரை
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர்தான் இந்த அதிருஷ்டசாலி அமைச்சர்கள்.

மர்மம்தான்
இந்த 7 பேரும், ஐந்து ஆண்டுகள் தங்களை மட்டுமின்றி, தங்கள் துறையையும் காப்பாற்றிவிட்டார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது. பதவி பறிபோன அமைச்சர்கள் எதனால் நீக்கப்பட்டனர் என்பது தெரியாததை போலவே, இந்த எழுவரும், எப்படி பதவியில் தொடர்ந்தார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications