இலங்கையில் பிடிபட்ட படகுகளை மீட்கக் கோரி 7 மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி.. நாகையில் பரபரப்பு
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படை பிடித்து சென்ற விசைப்படகுகளை விடுவிக்க கோரி நாகப்பட்டனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 7 மீனவர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் அவர்களது விசைப் படகுகளை விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து விசைப்படகு உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாகை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு படையினர், 108 ஆம்புலன்சுடன் குவிக்கப்பட்டனர்.
10.30 மணியளவில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் சிங்காரவேலு (30), கந்தசாமி (36), வெற்றிச்செல்வன் (28), மகேந்திரன் 26, சந்திரவேல் (37), குகன் (36) செந்தில் (30) ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவகத்திற்குள் வந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். அப்போது அங்கு இருந்த அக்கரைப்பேட்டை மீனவ கிராம நிர்வாகிகளும், பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரும் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் மீனவர்கள் ஓடினர்.
இதையடுத்து போலீசார் விரட்டி சென்று தடுத்தனர். அப்போது கலெக்டர் முனுசாமி காரில் அலுவலகம் வந்தார். அவரின் காரை வழி மறித்து கார் முன் 25 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுத்து மறியல் செய்தனர். இதையடுத்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அமைச்சர் ஜெயபால் பேசுகையில், இன்னும் 5 நாளில் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு சம்மதிக்காத மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அமைச்சரும், கலெக்டரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல முறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து ஒரு பகுதி மீனவர்கள் மட்டும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். முற்றுகை போராட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு 7 மீனவர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.
அவர்களுக்கு எந்த முதல் உதவியும் செய்யாமல் போலீசார் விட்டு விட்டதால், கலெக்டர் அலுவலக முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட உடையுடன் ஒன்றரை மணி நேரம் மீனவர்கள் வெயிலில் உட்காந்திருந்தனர்.
அவர்களில் மகேந்திரன், கந்தசாமி, குகன் ஆகிய மூன்று பேரும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய போதே மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டவர்களின் மேல் தண்ணீர் ஊற்ற அங்கு தண்ணீர் கிடைக்காததால், சக மீனவர்கள் வாட்டர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அதில் இருந்த தண்ணீரை மீனவர்களின் மீது ஊற்றினர்.