அம்மா ஸ்டிக்கர், டாஸ்மாக், வதந்திகள், முதலைகள்: கடுங்கோபத்தில் சென்னைவாசிகள்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பல்வேறு விஷயங்கள் கோபம் அடைய வைத்துள்ளன.
வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் படாதபாடுபட்டுவிட்டனர். வெள்ளத்தில் தத்தளித்தவர்களை ராணுவத்தினரும், தன்னார்வலர்களும் காப்பாற்றினர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நடந்த பல விஷயங்களால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.
அம்மா ஸ்டிக்கர்கள்
தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் அளித்த நிவாரணப் பொருட்களை பறித்து அதில் அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியது மக்களை கடுங்கோபம் அடைய வைத்தது.
டாஸ்மாக்
வெள்ளத்தில் சிக்கி மக்கள் குடிக்க நீர், உணவு இன்றி தவிக்கையில் நுங்கம்பாக்கம், சூளைமேடு, அண்ணாநகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கியது பலரையும் கொதிப்படைய வைத்தது.
நிர்வாகம்
நிவாரணப் பணி மேற்கொள்ள சென்னை வந்த ராணுவத்தினரை எங்கு செல்ல வேண்டும் என்று கூறாமல் மாநகராட்சி அவர்களை பல மணிநேரம் காக்க வைத்தது மக்களை நோகடித்துள்ளது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் வராமல் தலைமறைவானது மக்களுக்கு வருத்தமும், ஆத்திரமும் ஏற்பட்டது.
ஏரிகள்
ஏற்கனவே வெள்ளத்தில் நிற்கையில் செம்பரபாக்கம், தையூர், மதுராந்தகம் ஏரிகள் வேறு உடைந்துவிட்டதாக பரவிய வந்தியால் மக்கள் நம்பிக்கை முழுவதையும் இழந்து கடுப்பாகினர்.
முதலைகள்
மகாபலிபுரத்தில் உள்ள சென்னை முதலை வங்கியில் இருந்து முதலைகள் தப்பிவிட்டதாக பரவிய வதந்தியால் மக்கள் அச்சமும், கோபமும் கொண்டனர்.
நாஸா
சென்னையில் மிக கனமழை பெய்து நகரம் மூழ்கும் என்று நாஸா கணித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரவியது மக்களை வேதனையும், கோபமும் அடைய வைத்தது.