கொடைக்கானல் ஏரியில் அரிய வகை ஜெல்லி மீன்களை கண்டுபிடித்த வேலூர் சிறுவன்
கொடைக்கானல் ஏரியில் அரிய வகை ஜெல்லி மீன்களை ஆராய்ச்சி செய்து அது புதிய இனம் என்று வேலூர் சிறுவன் கண்டறிந்துள்ளார்.
வேலூர்: கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு அரிய வகை ஜெல்லி மீன்களை கண்டெடுத்துள்ளார் வேலூரை சேர்ந்த சிறுவன் இஷான் ஆபிரகாம் பிச்சமுத்து.
இவர் வேலூரில் உள்ள ஐடா ஸ்கட்டர் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிக்க கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு செல்லும் வரை மிகவும் குளிர்ந்த நீரில் ஜாலியாக படகு சவாரி செய்வது என்ற எதிர்பார்ப்புடன்தான் சென்றார்.
9 வயது சிறுவனாயிற்றே ஜாலியான அனுபவங்களை அனுபவிக்கவே கொடைக்கானல் செல்வது என்பது இயற்கையான ஒன்றுதானே . அதுபோல் தான் இவரும் இயற்கை அழகை ரசிக்க சென்றார்.
படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் தன் குடும்பத்தினருடன் படகில் சவாரி செய்தார். அப்போது அந்த தண்ணீரில் ஜெல்லி மீனை கண்டார். பூச்சிகள், மீன்கள், மற்ற உயிரினங்கள் மீது ஆர்வம் கொண்ட இஷான், தான் பார்த்த ஜெல்லி மீனை அவரது தந்தை கிஷோர் பிச்சமுத்துவிடம் காண்பித்தார்.

அரிய வகை
பொதுவாக ஜெல்லி மீன்கள் கடலின் ஆழ்கடலில்தான் வசிக்கும். இதுபோன்று நன்னீர்களில் வசிக்காது என்று இஷானிடம் கிஷோர் தெரிவித்தார். இதனால் இனங்களின் சிலவற்றை சேகரிக்க இஷானுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக எங்கே சென்றாலும் வித்தியாசமான உயிரினங்களை கண்டால் அவற்றின் ஸ்பெசிமேன்களை சேகரிப்பதும் அவற்றை பற்றி தெரிந்து கொள்வதும்தான் இஷானுக்கு மிகவும் பிடிக்குமாம்.

1 செ.மீ. அகலம் கொண்ட மீன்
தந்தையும், மகனும் ஒரு செ.மீ. அகலம் கொண்ட சில ஜெல்லி மீன்களை சேகரித்தனர். கிஷோர் வேலூர் சிஎம்சியில் பணியாற்றி வருகிறார். எனவே சேகரித்த சாம்பிள்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கரையோர மேலாண்மை மையம் மற்றும் சிஎம்சி மருத்துவமனையில் ஆய்வுக்காக கொடுத்தார்.
அவர்களும் அதை உறுதி செய்தனர்.

இந்திய விலங்கியல் ஆய்வு மையம்
இதைத் தொடர்ந்து அந்த புதிய உயிரினமானது சென்னையில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.வெங்கட்ராமன் கூறுகையில், இஷான் கண்டுபிடித்த ஜெல்லி மீன் இந்தியாவில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அபூர்வம்
நன்னீரில் வாழும் ஜெல்லி மீன்கள் மிகவும் அரிதானவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஜெல்லி மீன்களின் இனப்பெருக்க முறை மற்றும் உணர் கொம்புகளின் எண்ணிக்கை ஆகியன கடந்த 1912-ஆம் ஆண்டு மும்பையில் காண்ட்லாவில் கண்டறிந்ததைக் காட்டிலும் வித்தியாசமானவையாகும் என்றார். இஷானின் இந்த கண்டுபிடிப்பு விலங்குகள் கண்டுபிடிப்பு ஆவணத்தில் இந்திய விலங்கியல் மையத்தால் இந்த ஆண்டு சேர்க்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications