நீட் தேர்வு:நாம் தமிழர் கட்சியின் நாளைய கருத்தரங்கில் ரவீந்தரநாத், கஜேந்திரபாபு, சபரிமாலா பங்கேற்பு
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா என்பது குறித்து மாபெரும் கருத்தரங்கம் நாளை நாம் தமிழர் கட்சியினரால் நடத்தப்படுகிறது.
சென்னை: நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா என்பது குறித்து நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்தும் "நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?" எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு நாளை செப்டம்பர் 18 அன்று மாலை 3 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இதில் மருத்துவத்துறை சார்ந்த பேரறிஞர்களும், அறிவுசார் பெருமக்களும் பங்கேற்று தனது கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள். இதில் மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் தாயப்பன், மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, சமூகப் போராளி சபரிமாலா, ஆகியோருடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொள்கிறார்.
இடம்: அண்ணா கலையரங்கம், சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்சன் (சென்னை) தொலைக்காட்சி எதிரில், சேப்பாக்கம், சென்னை.
தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் நினைவு தினம்:
இதேபோல் நாளை தாத்தா இரட்டை மலை சீனிவாசனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சீமான் கலந்து கொள்கிறார். காலை 10 மணிக்கு சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்