பணிக்கு செல்லும் வழக்கறிஞர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - பார் கவுன்சில் எச்சரிக்கை
சென்னை: வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பணிக்கு செல்லும் வழக்கறிஞர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்ளின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்ததை முழுவதும் உயர் நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் உயர் நீதிமன்றத்தின் எதிரே மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அதில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கிணி இம்மானுவேல், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் நளினி, முன்னாள் தலைவர் பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன் ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக வக்கீல்கள் நடத்தி வரும் போராட்டம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. அவரின் உருவ பொம்மையை சிலர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு கடும் கண்டனத்துக்கு உரியது. இதனை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் பார்த்து கொண்டு அமைதியாக இருக்காது. இது போன்று நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது எங்களின் பணியாகும்.
மேலும் வழக்கறிஞர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுக்கும் நபர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் எடுக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications