வங்கிகளில் கியூவில் காத்திருப்போருக்கு "மோர்" கொடுத்த தமிழிசை.. குறைகளையும் கேட்டார்!
வங்கிகளில் பழைய நோட்டை மாற்றுவதற்காக காத்திருந்தோருக்கு பாஜக தலைவர் தமிழிசை மோர் கொடுத்தார்.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மோர் கொடுத்தார். அவர்களது குறையும் கேட்டறிந்தார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏதோ வங்கிகளுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் 10 நிமிடங்களில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பலாம் என்ற நினைப்போடு வங்கிகளுக்கும், அஞ்சலகங்களுக்கும் சென்ற மக்கள் மாலை வரை வங்கி வாசல்களிலேயே கிடந்தார்கள். அப்போதும் பலரால் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் வீட்டிற்கு சலிப்போடு திருப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, 10ம் தேதியில் இருந்து ஏடிஎம் மையங்கள் திறந்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பிய மக்களுக்கு மறுபடியும் சிக்கல் பெரிதாகியது. 100 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாலும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்த முடியாத தொழில் நுட்ப சிக்கலாலும் பல ஏடிஎம்கள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை, மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள வங்கிகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு தமிழிசை மோர் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சாமானியர்கள், நடுத்தர மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவே பிரதமர் மோடி இப்படி ஒரு அறிவிப்பை செய்திருக்கிறார். இதனால் சாதாரண மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் உண்மைதான். ஆனால் என்ன செய்வது? நான் ஒரு மருத்துவர். கொள்ளை நோய் வரப் போகிறது என்றால் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஊசி போட்டால் வலிக்கும் என்றால் எப்படி நோயை போக்க முடியும். அப்படித்தான் இதுவும். மக்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் உங்களுக்கு பெரும் நன்மைகள் வரப் போகிறது என்று தமிழிசை கூறினார்.