அ.தி.மு.கவினர் வெடித்த பட்டாசு: தீப்பிடித்து எரிந்த ராஜகோபுரம்– காப்பாற்றிய மழை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற காளீஸ்வரர் கோவில் உள்ளது.
7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் இந்த கோவிலில் சிறிய கோபுரத்தை கட்டினர். 17-ஆம் நூற்றாண்டில் மருதுசகோதரர்கள் காலத்தில் பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டது.
இந்த கோவில் ராஜகோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் தெரியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோவிலில் உள்ள சிறிய கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றில் கீற்றுக்கொட்டகைகள் அமைத்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
நேற்று மாலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இதனால் உற்சாகம் அடைந்த அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போது, பட்டாசின் தீப்பொறி கோவில் ராஜகோபுர கீற்றுக்கொட்டகையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி கோபுரம் முழுவதும் பற்றி எரிந்தது. அந்த தீ சிறிய கோபுர கீற்றுக்கொட்டகைக்கும் பரவியது.
தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டதால், தேவகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு இருந்து தீயணைப்பு வண்டி வருவதற்குள் தீ மேலும் வேகமாக பரவியது.
அப்போது அந்த பகுதியில் பலத்த மழை கொட்டியது. மழைநீர் கோபுரத்தின் மீது வேயப்பட்ட சாரத்தில் பற்றி எரிந்த தீயை முற்றிலும் அணைத்தது.
இறைவனின் கருணையால் தீ அணைக்கப்பட்டதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறினர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் காளையார்கோவில் பஸ்நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. நகரில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.