சென்னையில் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை பலி.. தாயின் இடுப்பிலிருந்தபோது நேர்ந்த சோகம்
சென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: மாம்பலத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் துணிக்காய வைத்தபோது இடுப்பில் இருந்து நழுவிய குழந்தை 2 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது.
சென்னை மாம்பலம் துக்காராம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் முத்துராஜ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் வீட்டின் 2வது மாடியில் வசித்து வந்தனர். இன்று கண்ணன் வேலைக்கு சென்றதும் மகேஸ்வரி வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

திமிறி விழுந்த குழந்தை
துணிகளை துவைத்த மகேஸ்வரி, மகன் முத்துராஜை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவற்றை காயப்போட்டுள்ளார். சுவர் ஓரம் நின்று அவர் துணியை காயப்போட்டப்போது இடுப்பில் இருந்து திமிறிய குழந்தை எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

தலையில் பலத்த காயம்
இதில் குழந்தை முத்துராஜ் தலையில் பலத்த காயமடைந்தான். இதனை சற்றும் எதிர்பாராத மகேஸ்வரி அலறியடித்துக்கொண்டு கீழே ஓடினார்.

தீவிர சிகிச்சை
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சென்னை எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

பரிதாபமாக பலி
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி குழந்தை முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கதறிய தாய்
இரண்டாவது மாடியில் இருந்து குழந்தை நழுவி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பறிகொடுத்துவிட்டு தாய் மகேஸ்வரி கதறிய காட்சி துயரத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications