வேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஓடும் ரயிலில் இருந்து தப்பியோட்டம்
வேலூர்: வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் வேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி, சையது முகமது அலி ரயிலில் இருந்து தப்பியோடிவிட்டார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வேலூர் போலீசார், கடந்த ஆண்டு, அக்டோபர் 14ம் தேதி, ஆம்பூரில் பதுங்கியிருந்த சையது முகமது அலி என்பவரை கைது செய்தனர்.

சையது முகமது அலி செல்போனில் இருந்துதான் மிரட்டல் அழைப்பு சென்றது உறுதியானதை தொடர்ந்து, போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணைகளின்போது, சையது முகமது அலி, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ஆக்ரா, லக்னோ, அலிகர், அஜ்மீர் போன்ற நகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ள தீவிரவாதி என்பதும் தெரியவந்தது. நாடு முழுவதிலும் இவருக்கு எதிராக 7 தீவிரவாத வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வட மாநிலங்களில் போலீசார் கெடுபிடி அதிகமாக இருந்ததால் ஆம்பூரில் அடைக்கலம் புகுந்ததாகவும் சையது முகமது அலி வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து வேலூர் சிறையில் சையது முகமது அலி அடைக்கப்பட்டிருந்தார். வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் இவருக்கு கடந்த 4ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்பிறகு சையது முகமது அலி நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்தபடி இருந்தனர்.
இந்நிலையில், லக்னோ குண்டு வெடிப்பு தொடர்பாக, அங்குள்ள நீதிமன்றத்தில் சையது முகமது அலியை ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று லக்னோ போலீசார், வேலூர் போலீசாருக்கு வேண்டுகோள்விடுத்தனர். எனவே, சையது முகமது அலியை அழைத்துக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 19ம் தேதி இரவு வேலூர் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூர்துசாமி தலைமையில் 7 போலீசார் லக்னோ கிளம்பினர்.
இந்த ரயில் நேற்று இரவு 10.30 மணியளவில் மத்திய பிரதேச மாநிலம், இட்டார்ச்சி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, சையது முகமது அலி, எப்படியோ போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, தப்பியோடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இட்டார்ச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், வேலூர் போலீசாருக்கும் இத்தகவலை தெரிவித்தனர்.
பொதுவாக நீதிமன்றத்தில் இதுபோன்ற குற்றவாளிகளை ஆஜர் செய்யப்போகும்போது, அதிகபட்சமாக 4 போலீசார் உடன் செல்வது வழக்கம். ஆனால், சையது முகமது அலியின் குற்றச்செயல்களை கருத்தில்கொண்டு, 7 போலீசார் உடன் சென்றுள்ளனர். அப்படியிருந்தும் அவர் தப்பியோடியுள்ளார். இதனிடையே, தப்பியோடிய சையது முகமது அலியால் ஏதேனும் குண்டுவெடிப்புகள் நிகழுமோ என்ற அச்சத்தால் வட மாநில போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications