இயற்கையை காக்க கோரி.. 3000 கி.மீ. நின்றுகொண்டே பைக் பயணம்.. உலக சாதனையை நோக்கி நீலகிரி பெண்!
நின்றுகொண்டே பைக் ஓட்டி சாதனை படைக்க ஒரு பெண் புறப்பட்டுள்ளார்.
Recommended Video
உதகை: பெண்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி நீலகிரி பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டே மூவாயிரம் கிலோமீட்டர் செல்லும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
உதகை அருகே கூடலூர் மண்வயல் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் சைபி. தற்போது அவிநாசியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
இதற்கு முன் அவிநாசி முதல் சேலம் மாநகர் வரை நின்று கொண்டே பைக் ஓட்டி, மீண்டும் அவிநாசி திரும்பி சாதனை படைத்தார், அதாவது மொத்தம் 250 கிலோ மீட்டர் ஓட்டி ஓட்டியுள்ளார். இவரின் இந்த சாதனை யூ.ஆர்.எப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஆனாலும் சமுதாய நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் சைபிக்கு இருந்து கொண்டே இருந்தது.
அதனால் பெண்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் ஊட்டி முதல் சென்னை வரை நின்று கொண்டே மூவாயிரம் கிலோமீட்டர் பைக் ஓட்டி செல்லும் அற்புத சாதனையை தொடங்கி உள்ளார் இந்த 45 வயது பெண்மணி.
அரைஸ் & சைன் அறக்கட்டளை ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில் செஞ்சுலுவை சங்க தலைவர் கேப்டன் மணி, செயலாளர் சாந்தா மரியஜோஸ் ஆகியோர் கொடியசைத்து இந்த சாதனை பயணத்தை தொடங்கி வைத்தனர்.
உலக சாதனை என்ற சரித்திரத்தையின் மைல்கல்லை நோக்கி பயணிக்கும் சாதனை பெண்மணியால் மலை மாவட்டம் மகிழ்ச்சி கொண்டுள்ளது. இவரின் பயணம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வரும் 13-ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.