வேட்பாளர்கள் பொது விவாதம்: எப்போ வருவீங்க சார்... காத்திருக்கும் கரூர் மக்கள்
கரூர்: ஏப்ரல் 18ம் தேதி அன்று சாயக்கழிவு பிரச்சனை தொடர்பாக பொது விவாதம் நடத்த கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகின்றது.
கரூர் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக இருப்பது விவசாயமும், ஜவுளி தொழிலும் தான். இந்த இரண்டு தொழில்களும் அழிய முக்கிய காரணம் சாயக் கழிவுநீர் பிரச்சனை என்பது பலரது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றப்பட்டதனால் அமராவதி ஆறு, அதன் பாசன வாய்க்கால்கள், அவற்றிற்குட்பட்ட விவசாய நிலங்கள், கிணறுகள் மாசுபட்டு இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் கரூர் தொகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, காவிரி ஆறுகளில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால், ஆற்றில் மணலே இல்லை என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாவட்டத்தில் மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் விவசாயத்தையும், ஜவுளித் தொழிலையும் மீட்டெடுக்க மக்களின் உயிர் ஆதாரமான குடிநீர் பிரச்சனையை போக்க ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு விவாதத்தை ஏப்ரல் 18ம் தேதி அன்று கரூர் வெங்கமேடு புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்த உள்ளனர்.
இதில் பங்கேற்க அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, திமுக வேட்பளர் கரூர் சின்னசாமி, தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியேருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
தேவையில்லாமல் நாமே போய் வலிய பொது மக்கள் மத்தியில் மாட்டிக்கொள்ளக் கூடாது என சில வேட்பாளர்கள் கருதுவதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த விவாதம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் ஏற்பட்டுள்ளது.
எப்போ வருவீங்க சார்... என தொழிலாளர்கள் பலரும் காத்துக் கொண்டு உள்ளார்களாம்.