15 கிலோ தங்கம், ரூ.150 கோடி சொத்துக்கள் சிக்கின.. சசிகலா உறவினர்களின் 150 வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை: சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3வது நாளாக சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்து வருகின்றன. இன்று 135 இடங்களில் ரெய்டுகள் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இதுவரை நடந்த ரெய்டுகளில், கணக்கில் வராத 15 கிலோ தங்கம், ரூ.5.5 கோடி பணம் கிடைத்துள்ளதாக ஐடி துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 போலி நிறுவனங்களின் பெயர்களில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்களை இதுவரை ஐடி துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு இரு அறிக்கைகளை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
இதையடுத்து சசிகலா உறவினர்களுக்கு சம்மந்தப்பட்ட 150 வங்கி கணக்குகளை ஐடி துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.