தேர்தல் பிரசார சுவாரஸ்யம்: நடிகை விந்தியாவுக்காக அ.தி.மு.கவினர் அடிதடி….
சென்னை: தேர்தல் பிரசாரத்திற்காக நடிகைகள் வருகிறார்கள் என்றாலே உடன் பிறப்புக்களுக்கும், கழக கண்மணிகளுக்கும் உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிடும்.
பிரசார வேனில் யார் அருகில் நிற்பது என்பது தொடங்கி ஏரியாவுக்கு அழைத்து செல்வது வரை அடிதடி ரவுசு கட்டும். என்னதான் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தாலும் அவர்களை நடிகை என்ற நிலையிலேயே வைத்து பார்ப்பதுதான்.
அதிமுகவிற்காக பிரசாரம் செய்து வரும் நடிகை விந்தியாவை பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வதிலும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
படையெடுத்த நடிகர்கள்
ஈரோடு லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் செல்வக்குமார சின்னையனை ஆதரித்து, நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, பொன்னம்பலம், மனோபாலா போன்ற நடிகர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர்.
விந்தியா பிரசாரம்
கடந்த, 28ம் தேதி, நடிகை விந்தியா, ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.
ஈரோடு பி.எஸ்.பார்க் சிக்னலில், திறந்த வேனில் விந்தியா பேசினர். மாநகராட்சி துணை மேயர் பழனிசாமி, மண்டல தலைவர் மனோகரன் மற்றும் கட்சியினர் வேனில் உடனிருந்தனர்.
எங்க ஏரியாவுக்கு வாங்க
அங்கு பிரசாரத்தை முடித்த நிலையில், வளையக்கார வீதியில் பிரசாரத்துக்கு விந்தியாவை அழைத்து போவதாக, மண்டல தலைவர் மனோகரன் தெரிவித்தார். ஏற்கனவே, தன் ஏரியாவான சூரியம்
பாளையம் பகுதிக்கு விந்தியாவை அழைத்துச் செல்ல, காத்திருந்த, துணை மேயர் பழனிசாமி, "என் ஏரியாவுக்குத்தான், நீங்கள் வரவேண்டும்' என, சொன்னதால், எங்கு செல்வது என புரியாமல் குழம்பி நின்றார் விந்தியா.
அடிதடி மோதல்
இந்த பிரச்னை தொடர்பாக, மனோகரனும் பழனிசாமியும் கடும் வாக்குவாதம் செய்ய, இரண்டு பேரின் ஆதரவாளர்களும் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கினர். அதனால், அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குஷ்புக்கு ரூட் கிளியர்
தி.மு.க.,வில் குஷ்பூ போன்றவர்களுக்கு, முன் கூட்டியே அவர்களுடைய பயணத் திட்டம், அவர்கள் பிரசாரத்துக்கு போகும் ரூட் குறித்தெல்லாம் சரியாக திட்டமிட்டு, சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்கள் அதை தங்கள் உதவியாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்கள், பயணதிட்டத்தை யாருக்காகவும் மாற்றுவதில்லை. அதனால், குஷ்பூ போன்ற பெரிய நடிகைகளுக்கு பிரசாரத்தில் சிக்கல்கள் வருவதில்லை. ஆனால் விந்தியா போன்ற நடிகைகளுக்கு பிரசாரத்திற்கு போகும் இடங்களில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் அதிமுகவினர்.
கோபமடைந்த வெண்ணிற ஆடை நிர்மலா
கடந்த வாரம் இதேபோல பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த வெண்ணிற ஆடை நிர்மலா, பேசிக்கொண்டிருக்கும் போதே வேனில் இருந்த முக்கிய பிரமுகர், அப்படி பேசாதீங்க... இப்படி பேசுங்க... இதை சொல்லுங்க என்று எடுத்துக் கொடுத்தார். உடனே கோபப்பட்ட நிர்மலா, முதலியே தெளிவா சொல்லிங்க... இங்க வந்து குறுக்கிட வேண்டாம் என்றார்.
ரூ.2500 மட்டும் தானா?
நகைச்சுவை நடிகை வாசுகி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்ற போது, கதர் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி... வெறும் ரூ.2500 மட்டுமே கொடுத்தனுப்பினாராம். ஹோட்டல் அறைக்கு வந்து பார்த்த வாசுகி வேட்பாளருக்கு போனை போடவே... தெரிந்தவர் மூலம் ரூ.25000 கொடுத்தனுப்பினாராம்.
ரூ. 2 லட்சம் கேட்ட சரத்குமார்
இது ஒருபுறம் இருக்க அதிமுகவிற்கு பிரசாரம் செய்ய கிளம்பியுள்ள சரத்குமார் இரண்டு நாட்களிலேயே 5 நாட்களுக்கு ஓய்வு கேட்டு அப்ளிகேசன் கொடுத்து விட்டாராம். அதோடு மட்டுமல்லாது ஒருநாள் பிரசாரத்திற்கு ரூ.2 லட்சம்வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.