ஒரு இலை எம்ஜிஆர்... இன்னொரு இலை ஜெ... உணர்ச்சித் தொண்டரின் புல்லரிக்க வைக்கும் விளக்கம்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர் அதிமுகவினர்.
Recommended Video
சென்னை: இரட்டை இலையில ஒரு இலை எம்ஜிஆர் இன்னொரு இலை ஜெயலலிதா என்று அதிமுக தொண்டர் ஒருவர் உணர்ச்சி பொங்க விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது முடக்கப்பட்ட இரட்டை இலை 8 மாத கால சட்ட போராட்டத்திற்குப் பின்னர் மீண்டும் மலர்ந்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கட்சியும்,கொடியும் சின்னமும் முடக்கப்பட்டது ஒவ்வொரு அதிமுக தொண்டரின் உள்ளத்தில் குமுறலை ஏற்படுத்தியது.
இலை எங்களுக்கே
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அக்டோபர் மாதம் முதல் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. ஆனால் இலை தங்களுக்கே கிடைக்கும் என்று ஒருங்கிணைந்த அணியும், தினகரன் தரப்பினரும் கூறி வந்தனர்.
நியாயத்திற்கு வெற்றி
இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைத்த அணிக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதே போல தங்களுக்கு சின்னம் கிடைத்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். நியாயத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.
தொண்டர்கள் மகிழ்ச்சி
முதல்வரின் பேட்டியை தொலைக்காட்சி மூலமாக பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிமுக அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா
இரட்டை இலை சின்னம் குறித்து விளக்கம் சொன்ன ஒரு அதிமுக தொண்டர், ஒரு இலை எம்ஜிஆர் மற்றொரு இலை ஜெயலலிதா என்றார். முடக்கப்பட்ட சின்னம் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி என்றும் கூறினார்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ்
இப்போது ஒரு இலை எடப்பாடி பழனிச்சாமி,இன்னொரு இலை ஓ.பன்னீர் செல்வம். இருவரும் சேர்ந்து முடங்கிய இலையை மீட்டு விட்டனர் என்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறினர்.