புதன்ஹோரையில் பணிமனையை திறந்து ஒரே நேரத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்த அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் பணிமனைகளை திறந்து உடனடியாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். சனிக்கிழமையான இன்று காலை 11 மணிக்கு புதன்ஹோரை என்பதால் அதே சென்டிமெண்ட் படி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, எந்த காரியமாக இருந்தாலும் தனது ராசி மற்றும் ஜோசியர்களின் ஆலோசனைப்படித்தான் நடந்து கொள்வார். கூட்டணியாகட்டும், தேர்தல் பிரசாரமாகட்டும், வேட்பு மனு தாக்கலாகட்டும் எல்லாம் ஜோசியர்களின் ஆலோனைகள்படிதான்.
கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அதே நேரம், ஜோசியர்களின் ஆலோசனையின்படி இன்று 9ம் தேதி சென்னையில் தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா தொடங்குகிறார். மேலும், தனது ராசிப்படி தேர்தல் பிரசார மேடை அமைப்பு வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
புதன்ஹோரை
ஜெயலலிதா தான் செய்யும் செயலை புதன்ஹோரை பார்த்து செய்கிறார். கடந்த மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்ற போது சனிக்கிழமை 11 மணிக்கு பதவியேற்றார். அதேபோல ஏப்ரல் 9-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறக்க உத்தரவிட்டார்.
பிரச்சாரம் தொடக்கம்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில், அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று, மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து, தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். சென்னை, ராயபுரத்திலும் அக்கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து, மக்களிடம் பிரசாரத்தை தொடங்கினார்.
சி.ஆர் சரஸ்வதி
பல்லாவரம் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதி, தனது தொகுதியில் அதிமுக பணிமனையை திறந்து வைத்து பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
மதுரையில் தேர்தல் பணிமனை
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை இன்று தொடங்கினர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போன்றோர் பிராச்சாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிடும் செல்வம், மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் தக்கார் பி.பாண்டி, சோழவந்தான்- கி.மாணிக்கம், மதுரை வடக்கு- ராஜன் செல்லப்பா, மதுரை தெற்கு- எஸ்.எஸ்.சரவணன், மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் மா. ஜெயபால், மதுரை மேற்கு செல்லூர் கே.ராஜு, திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.எம். சீனிவேல் , திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டியில் போட்டியிடும் பா.நீதிபதி ஆகியோர் மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர்.
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து மதுரை மாவட்டத்தில் பிராச்சாரத்தை தொடங்கினர். இவர்கள் அனைவரும் போட்டியிடும் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று மக்களிடையே பிராச்சாரம் செய்து வருகின்றனர்.
234 தொகுதிகளிலும் பணிமனை
மிசன் 234 திட்டம் வகுத்துள்ள அதிமுக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பணிமனையை திறந்துள்ளது. 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களும், 7 தொகுதிகளில் கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகின்றனர். 234 இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்குகிறது அதிமுக. பிரச்சாரம் தொடங்கப்பட்டதை அடுத்து தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.