ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்காதவர்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசலாமா?: ஸ்டாலின்
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில் சட்டம்-ஒழுங்கு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் பல நிறைவேற்றப்படவில்லை என்றும் மணப்பாறை பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மணப்பாறையில் பெரியார் சிலை அருகே நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை பலவற்றை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் இதை சவாலாக கூறாமல் கேட்கிறேன். ஒரு இடத்தில் பொதுமேடை அமைத்து இதனை விவாதிக்க ஜெயலலிதா அல்லது அமைச்சர்கள் தயாரா?. ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்றார்.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் நமக்கு நாமே பயண திட்டத்தை கலைஞர் ஆசியுடன் தொடங்கினேன். மக்களை தொகுதி, தொகுதியாக சென்று சந்தித்தேன். குறைகளை கேட்டேன். 234 தொகுதிகளில் இதுவரை 218 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன். மீதமுள்ள 16 தொகுதிகளை பிப்ரவரி மாதம் 12ந்தேதிக்குள் முடிக்க உள்ளேன். இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் சென்றவன் என்ற சிறப்பை பெற உள்ளேன்.
திமுக வெற்றி
மாற்றத்தை உருவாக்க தான் இந்த பயணம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும். அவ்வாறு வரும் போது உங்களது கோரிக்கைகள் என்னவாக இருக்கும். உங்களது எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிய தான் இந்த நமக்கு நாமே பயண திட்டம். ராமஜெயம் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில் சட்டம்-ஒழுங்கு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக தெரிவித்து 6 மாதங்களாகியும் ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதா? ஒரு நிறுவனம் எங்கும் தொடங்கப்பட்டதா? யாருக்காவது வேலை வழங்கப்பட்டதா? இல்லை.
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை
திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க பஞ்சப்பூரில் கடந்த தி.மு.க. ஆட்சியில் நான் அடிக்கல் நாட்டினேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டது. வேறு இடத்திலாவது பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. திருச்சி-மணப்பாறை சாலையில் வாசனை தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்து நிறைவேற்றவில்லை.
மக்கள் மன்றத்தில்
மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். இதனை மறைக்க தான் சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை பேசவிடாமல் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் பேச அனுமதித்தால் தான் ஜல்லிக்கட்டு, மதுவிலக்கு பற்றி பேசமுடியும். ஆனால் உள்ளே பேசவிடாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறோம் என்றார் ஸ்டாலின்.
தமிழகத்தில் மாற்றம் வேண்டும்
கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை,எளிய மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்வேறு தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இவைகளைக் களைய, தமிழகத்தைக் காப்பாற்ற வரும் சட்டசபைத் தேர்தலில், நீங்கள் வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.