தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது... ப.சிதம்பரம்
சிவகங்கை : தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட இத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தனது மகனும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து திருமயம் ஒன்றியம் மனைப்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
இன்றைக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் யார் அரசை அமைப்பது என்பது குறித்து நடைபெறும் தேர்தல் ஆகும். இது மத்திய அரசை நிர்ணயம் செய்வது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு இடையே நடக்கும் போட்டியாகும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையே நடைபெறும் போட்டி அல்ல. சட்டசபைக்கு நடக்கும் போட்டியானால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்குமான போட்டி என்று சொல்லலாம்.
தமிழகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட வெற்றி பெற முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்கு போடும் ஓட்டு செல்லாத ஓட்டுகள்தான்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்திற்கு பாதுகாவலனாக விளங்கும். பருவ மழை பொய்த்த இந்த காலத்தில் இந்த திட்டம் தான் மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதியம் ரூ.167ஐ தர முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள்.
இவ்வாறு சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.