இன்னும் 2.5 லட்சம் கோடி கடனுக்கு வழி வகுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை!
சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள கற்பனைக்கும் எட்டாத இலவச திட்டங்களை அமல்படுத்த வேண்டுமானால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் 2.5 லட்சம் கோடியை செலவிட வேண்டி வருமாம்.
அரசிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்பதால் இதைக் கடன் வாங்கித்தான் செய்தாக வேண்டும். அப்படிச் செய்தால் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களின் மீது விழுந்த இரண்டு லட்சம் கோடி கடனோடு இந்தப் புதிய நிதிச் சுமையும் ஏறி தமிழகமே திவாலாகும் நிலையும் ஏற்படலாம்.
தமிழக மக்களின் தலையில் மிகப் பெரிய நிதிச் சுமையை சுமத்தவே இந்தத் திட்டங்கள் உதவும் என்றும் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் - விவசாயிகள்- மாணவர்கள்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்கு வங்கியான பெண்கள், விவசாயிகள், மாணவர்களை மனதில் வைத்து அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எல்லாமே கவர்ச்சிகரமானவை.
வருடத்திற்கு ரூ. 50,000 கோடி
இந்தத் திட்டங்களை ஒன்று விடாமல் அமல்படுத்துவதாக இருந்தால் வருடா வருடம் ரூ. 50 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மொபெட்டுக்கே பல ஆயிரம் கோடி
குறிப்பாக பெண்களுக்கு மொபெட் வாங்க பாதி மானியம் என்ற அறிவிப்பை அமல்படுத்த மட்டும் வருடத்திற்கு அரசுக்கு ரூ. 45,000 கோடி செலவாகுமாம்.
அரசு ஊழியர் சம்பளம்
மத்திய அரசு ஊழியர்கள் போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும் என்ற திட்டத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.
கடன் தள்ளுபடிக்கு 5500 கோடி
அதேபோல விவசாயிகளின் அனைத்து வகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை அமல்படுத்த ஆண்டுக்கு ரூ.5,500 கோடி செலவு ஏற்படும்.
செட்டாப் பாக்ஸுக்கு ரூ. 1500 கோடி
அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இலவச செட்டப் பாக்ஸ் திட்டத்துக்கு ரூ.1,500 கோடி செலவு ஏற்படும். ரேஷன்கார்டு தாரர்களுக்கு இலவச செல்போன் வழங்க ரூ.2000 கோடி ஆகலாமாம்.
100 யூனிட் இலவச மின்சாரத்தால் பெரும் பாதிப்பு வரும்
அனைத்து வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 78.55 லட்சம் குடும்பங்கள் பலனடையும். இதனால் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி சுமை ஏற்படும்.
மொத்தம் இரண்டரை லட்சம் தேவைப்படும்
இப்படியாக வருடத்திற்கு குறைந்தது ரூ. 50,000 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட ரூ இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்படுமாம்.
ஏற்கனவே தமிழக அரசு ரூ. 2 லட்சம் கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூடுதல் செலவும் சேர்ந்தால் நிலைமை மோசமாகும் என்றே தெரிகிறது.