கணினிமய தமிழ்நாடு கனவை நனவாக்க மாணவர்களுக்கு மடிக்கணினி: ஓ.பி.எஸ்
சென்னை: எதிர்காலத்தில் திறன்மிக்க மனிதவள ஆற்றலின் தேவையைக் கருத்தில் கொண்டும், ‘கணினிமய தமிழ்நாடு' என்ற கனவை நனவாக்கும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருவதாக தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு புதுமையான திட்டத்தின் மூலமாக இதுவரை 31.78 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த தனது உரையில், 2014 -2015ம் ஆண்டு வரை இதற்கென 3,231.74 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2015-2016ம் ஆண்டிற்கு 1,100 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வீட்டுப்பணி குறைப்பு
பெண்களின் வீட்டுப் பணிச்சுமையைக் குறைக்கவும், அவர்களை பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்க வழிவகை செய்யவும், விலையில்லா மின் விசிறிகள் அல்லது மின் அடுப்புகள், மிக்சிகள் மற்றும் கிரைண்டர்களை தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது.
தேர்தல் வாக்குறுதி
2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் 7,755.73 கோடி ரூபாய் செலவில் 1.76 கோடி எண்ணிக்கையிலான இத்தொகுப்புகளை வழங்குவதன் மூலமாக மேலும் ஒரு தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.
உயர்கல்வி உதவித் தொகை
உயர்கல்வி உதவித் தொகைக்காக, இந்த இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் 1,430 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்றே, முதல்வர் தொடங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கிழ் 289 கோடி ரூபாய் செலவில், 8,63,159 மிதிவண்டிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு
2016-17ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 64.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.