சசிகலா குறித்து தவறான விமர்சனம் - போலீஸ் கமிஷனரிடம் அதிமுக புகார்
சசிகலா குறித்து தவறாக விமர்சனம் செய்பவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலா குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரபரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது தோழி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்று கட்சியை கைப்பற்றினார். 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் சசிகலாவே மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதா உயிரிழந்ததும் சசிகலாதான் இதற்கு காரணம் என பொதுமக்களும் அதிமுகவினரும் குற்றம்சாட்டினர். இதனால் அதிமுக ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு சசிகலா மீது வெறுப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் விமர்சனம்
மேலும் ஜெயலலிதா மறைந்து ஒரு மாதத்திற்குள்ளேயே சிகை அலங்காரம், பொட்டு, ஜாக்கெட் என அனைத்திலும் ஜெயலலிதாவை அப்படியே காப்பியடித்த சசிகலாவை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த எரிச்சல் காரணமாக சசிகலாவை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிட்டதோடு அவர் குறித்தும் சமூகவலை தளங்களில் விமர்சனம் செய்தனர்.
ஸ்டாலின் மருமகன்தாக காரணம்
ஸ்டாலின் மருமகன்தான் ஒரு குழு வைத்து சசிகலா குறித்து அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக சசிகலா தரப்பு அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் சென்னை காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளனர்.
கமிஷனரிடம் புகார்
அதில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக 115 புகார்களை கமிஷனரிடம் அளித்துள்ளனர்.
அவதூறு தகவல்கள் சேகரிப்பு
சமூக வலைத்தளங்களில் 173 அவதூறு தகவல்களை சேகரித்து போலீஸாரிடம் வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட சில எதிரிகள், குறிப்பிட்ட நிறுவனத்தின் வாயிலாக திட்டமிட்டு அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.