கன்னடத்தவர்களின் வேன், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அதிமுகவினர்! புகாரை ஏற்காத போலீசார்!
பழனி: பழனியில் சுவாமி தரிசனம் செய்யவந்த கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் கார், வேன் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் போலீசில் புகார் அளித்தும் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனராம்.
கர்நாடக மாநிலம், பெங்களுரு எலக்ரிக்சிட்டி பகுதியில் இருந்து, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் வேன் மூலம் கேரளாவுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் பழனி வந்த அவர்கள், ரோப்கார் நிறுத்தும் இடத்தில் வேனை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய மலைக்கு சென்றுவிட்டனர். டிரைவர் சிப்பாய் சாமி மட்டும் வேனில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக வந்த தகவலையடுத்து இனிப்பு கொடுத்த அதிமுகவினர், ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கிடைத்ததும், கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர்.
அப்போது டிரைவர் சிப்பாய் இருந்த வேனின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் டிரைவருக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிமுகவினரை கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றுவிட்டனர்.
இதேபோல் பழனி அடிவாரத்தில் பெங்களுரைச் சேர்ந்த ராஜேஸ்குமார், சாமி தரிசனம் செய்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் அவரது காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
வேன், கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது குறித்து, பழனி டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் ஏற்கவில்லை என்று போலீசார் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.