21ம் தேதி 'அம்மா' வருகிறார்: ஆர்.கே. நகர் தொகுதியில் தீயாக வேலை செய்யும் அதிமுகவினர்
சென்னை: இடைத்தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா வரும் 21ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஜெயலலிதா வருகையையொட்டி ஆர்.கே. நகரில் உள்ள அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி. மகேந்திரன், சுயேட்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
திமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. தேர்தலையொட்டி ஆர்.கே. நகர் தொகுதியில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
தேர்தலையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். தொகுதியில் திரும்பும் பக்கம் எல்லாம் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த அதிமுகவினரை காண முடிகிறது.
தொகுதியில் உள்ள சுவர்களில் ஜெயலலிதாவின் புகைப்படமும், அம்மாவுக்கு வாக்களியுங்கள் என்ற வாசகமுமாக உள்ளது. இந்நிலையில் வரும் 21ம் தேதி ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என்று அவைத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து பிரச்சார வேனில் கிளம்பும் ஜெயலலிதா தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, எழில்நகர், புதுவண்ணாரப்பேட்டையில் மக்களிடம் ஆதரவு கோர உள்ளார். ஏற்கனவே திருவிழாக்கோலம் பூண்டுள்ள ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதா வர உள்ளதால் மேலும் குதூகலம் அடைந்துள்ளது.
தொகுதிக்கு ஜெயலலிதா வருகையில் அவரை அசர வைக்க வேண்டும் என்ற முனைப்போடு கட்சியினர் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.