மிஷன் 234… வாக்குச்சாவடிக்கு ஒருவர்… அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும் அதிமுக!
சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளையும் வெல்லவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள அதிமுக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே 5 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 547 வாக்காளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்படுவார் என அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளது எதிர்கட்சியினரிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு எதிர்கட்சிகள் அனைவரும் தயாராகிவருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே'பயணம் கிளம்ப போகிறார். இந்த பயணத்தின் நோக்கமே அதிமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்து சொல்வதுதான்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 25 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார். இதேபோல தமிழகம் முழுவதும் மண்டலவாரியாக மாநாடு நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியோ, வடமாவட்டங்கள் முழுவதும் 120 தொகுதிகளை குறிவைத்து துண்டு பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டது.
தலையாய பிரச்சினை
மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடுதான் தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினைகளை மறக்கடிக்கும் வகையில் எதிர்கட்சியினரே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
எதிர் கட்சியின் அட்டாக்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி சொல்வதை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது போலவே இருக்கிறது சமூக வலைத்தள கமெண்டுகள். ஏனென்றால் மது ஆலைகளில் பங்குதாரர்களாக இருக்கும் திமுகவினரை வைத்துக்கொண்டே மதுவிலக்கு பற்றி பேசுவதுதான் முரண்பாடாக இருக்கிறது.
மது ஒழிப்பு பிரச்சாரம்
பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணியோ சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனால் முதல் கையெழுத்தே மது ஒழிப்புதான் என்று மேடை தோறும் முழங்கி வருகிறார். இந்த பாணியை மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள், பாரதிய ஜனதா கட்சியினரும் முழங்கி வருகின்றனர்.
ஆளும் அதிமுக திட்டம்
அதே நேரத்தில் ஆளும் அதிமுகவோ இலவச திட்டங்களை விநியோகிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தொகுதிவாரியாக இலவசப் பொருட்கள் விநியோகத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
செயல்வீரர்கள் கூட்டம்
அதிமுகவினரின் வேகத்தை அதிகரிக்க ஐவர் அணியும் களமிறங்கியுள்ளது. கரூர் தொடங்கி மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவதோடு எதிர்கட்சிகளின் வியூகத்தை உடைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
கூட்டணி யாருடன்
ஆளும் அதிமுகவை தோல்வியடையச் செய்ய எதிர்கட்சிகள் கூட்டணி வியூகத்தையும், பேச்சுவார்த்தையையும் மறைமுகவாகவே நடத்த ஆரம்பித்து விட்டன. முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியதை அடுத்து பாஜக - அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது.
வாக்காளர்களுடன் சந்திப்பு
அதே நேரத்தில் அதிமுக அரசின் சாதனைகள் சென்று சேரும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்திலுள்ள 5 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 547 வாக்காளர்களையும் சந்தித்து பேச அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார் ஜெயலலிதா. இது அனைத்து தொகுதிகளும் அதிமுக தனித்து போட்டியிடும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் ஜெயலலிதா.
பொறுப்பாளர்கள் நியமனம்
இடைத்தேர்தல் நடைபெறும் நேரங்களில் வாக்குகளை அப்படியே அள்ளும் வகையில் ஒரு பூத்துக்கு ஒருவர் சில நேரங்களில் 100 ஓட்டுக்கு ஒருவர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்து வாக்காளர்களை கவர்ந்தனர் அதிமுக நிர்வாகிகள்.
64,094 வாக்குச்சாவடிகள்
தமிழகத்திலுள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு சேகரிப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலுள்ள வாக்காளர்களை சந்தித்து தமிழக அரசு செய்துள்ள சாதனைகளையும், வளர்ச்சிகளையும் விளக்கவேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார் ஜெயலலிதா.
வாக்கு சேகரிப்பாளரின் பணி
ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்று அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் எத்தனை முறை சந்திக்க இயலுமோ அத்தனை முறை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவு.
சொல்லியடித்த அதிமுக
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை வென்றது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. காரணம் ஒவ்வொரு அதிமுக வேட்பாளரும் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். அதேபோல வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் மகத்தான சரித்திர புகழ்மிக்க வெற்றியைப் பெற பல திட்டங்களை தீட்டி வருகிறது.
ஆபரேசன் 234
சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளை வெல்ல, 64,094 வாக்குச்சாவடிகள், 5 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 547 வாக்காளர்கள் என ஒருவரையும் விடாமல் கவர அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக ஐவர் அணியினர் தலைமையில் பல வியூகங்களை அமைத்துள்ள ஜெயலலிதாவிற்கு இந்த ஆபரேசன் 234 கைகொடுக்குமா? அல்லது 96, 2006, போல 2016ம் சறுக்கலை ஏற்படுத்துமா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர் அரசியல் நோக்கர்கள்.
எதிர்கட்சிகள் மெகா கூட்டணி
திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகியோர் இணைந்து மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே தொண்டர்கள், நிர்வாக கட்டமைப்பு மிக்க ஆளும் அதிமுகவை வீழ்த்த முடியும். ஆனால் திமுக தலைமையில் ஒரு அணி, பாமக தலைமையில் ஒரு அணி, பாஜக தலைமையில் ஒரு அணி, தேமுதிக தலைமையில் ஒரு அணி என பிரியும் பட்சத்தில் அதிமுகவிற்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.