ஊரெல்லாம் பந்த்.. அதிமுக மட்டும் வேற வேலையில் ரொம்ப பிசி #TamilNaduBandh
சென்னை: ஊரெல்லாம் பந்த் நடந்து வரும் நிலையில் அதிமுகவினர் மட்டும் அதைப் பற்றி சற்றும் கவலையே படாமல் வேறு வேலையில் பிசியாக உள்ளனர்.
காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலை நாட்டவும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கக் கோரியும் விவசாயிகள், வர்த்தகர்கள் அமைப்புகள் இணைந்து இன்று எதிர்க்கட்சியினர் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் பந்த் பல இடங்களில் முழுமையாக உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் சாலை மறியல், ரயில் மறியல் என மும்முரமாக உள்ளன.
அதிமுகவினருக்கு வேறு கவலை
இந்த நிலையில் அதிமுகவினர் மட்டும் வேறு வேலையில் இன்று பிசியாக காணப்பட்டனர். அதிமுகவில் இன்று முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு பெறப்படுகிறது. இதனால் அதிமுகவினர் காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமாக கட்சி அலுவலகங்களில் குவிந்து விட்டனர்.
சென்னை முதல் குமரி வரை
சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. இந்தப் பணி இன்று தொடங்கியது.
முண்டியடிப்பு
பல இடங்களிலும் அதிமுகவினர் விதம் விதமான கார்களில் கட்சி அலுலகங்களை மொய்த்து விட்டனர். புல் மேக்கப்பில், வெள்ளையும் சொள்ளையுமாக அவர்கள் விருப்ப மனுக்களைக் குவிந்தனர். பல இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் இருந்ததையும் பார்க்க முடிந்தது.
போலீஸ் பாதுகாப்பு
பல இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தாதலும், கோஷ்டி மோதல் ஏற்பட்டு வேட்டிக் கிழிப்பு உள்ளிட்ட வில்லங்க மோதல்கள் நடந்து விடாமல் தடுக்க போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பந்த்தோடு அதிமுகவினரையும் பந்தோபஸ்தாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இன்று போலீஸாருக்கு வந்தது.
22ம் தேதி வரை தரலாம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இன்று முதல் 22ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று விட்டால் 5 ஆண்டுகளில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணம் கட்சியினர் பலரிடம் உள்ளதால் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற துடிப்பும் அவர்களிடம் நிறையவே காணப்படுகிறது.
காவிரி வந்தா என்ன.. கல்யாணம் நின்னா என்ன.. நம்ம வேலையை நாம பார்ப்போம்!