ஜனாதிபதி தேர்தலில் காங். வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத் 'ஒரே போடு'
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும் என தினகரன் கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் ஒரே போடாக போட்டிருக்கிறார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரைத்தான் அதிமுக ஆதரிக்க வேண்டும்; அதுதான் சரியானதும் கூட என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அதிரடி காட்டியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் பாஜகவை ஆதரிப்பதில் போட்டி போட்டு சரணடைகின்றன. ஆனால் தினகரன் கோஷ்டியோ டெல்லி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.
பாஜகவுக்கு எதிர்ப்பு
சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் தலையெடுத்துவிடக் கூடாது; ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடக் கூடாது என்பதில் டெல்லி கங்கணம் கட்டி செயல்படுகிறது என்பது இந்த கோஷ்டியின் குற்றச்சாட்டு. இதையே பொதுக்கூட்டங்களிலும் நாஞ்சில் சம்பத்தும் பேசிவருகிறார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு உங்களுக்குத்தான் என டெல்லியில் வலிய சென்று இரு கோஷ்டிகளும் வாக்குறுதி தந்து வருகின்றனர். ஆனால் இதற்கு தினகரன் கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஆர்எஸ்எஸ் நபருக்கு நோ ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் ஆர்எஸ்எஸ் சித்தாந்த்தை பின்பற்றும் ஒருவரை பாஜக வேட்பாளராக முன் நிறுத்தினால் உங்கள் நிலைப்பாடு என்ன என புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ஆர்.எஸ்.எஸ். வேட்பாளரை அதிமுக ஆதரிக்கக் கூடாது என்றார்.
காங். வேட்பாளருக்கு ஆதரவு
அப்படியானால் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆம் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரித்துதான் யதார்த்தமானது சரியானதும் என அதிரடியாக கூறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.