40 தொகுதிகளும் அம்மாவுக்குத்தான்.. அடித்துச் சொல்கிறார் சரத்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சரத்குமார். அப்போது அவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வர மத்தியில் ஆதரவு கிடைக்காது. ஜெயலலிதாதான் பிரதமராகப் போகிறார். அதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். அது நிச்சயமும் கூட.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்காக நான் தீவிரப் பிரசாரமும் செய்யவுள்ளேன். 40 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்வேன்.
மத்தியில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஆம் ஆத்மியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது.
நெல்லையில் பிப்ரவரி 16ம் தேதி எங்களது கட்சியின் 2வது மாநில மாநாட்டைக் கூட்டியுள்ளோம். அதில் நாடாளுமன்றத் தேர்தல் உத்திகள் குறித்து வகுக்கவுள்ளோம்.
எங்களது கட்சிக்கு எத்தனை சீட் கேட்பது என்ற சிந்தனையே இப்போது எங்களிடம் இல்லை. அதுகுறித்து முதல்வர் என்ன கருதுகிறாரோ அதன்படி நாங்கள் நடப்போம். முதல்வர் வாய்ப்பளிக்கும்போதுதான் அதுகுறித்து சிந்திப்போம்.
நாங்கள் சீட்டை நோக்கிப் பயணிக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு 2 சீட் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறோம் என்றார் சரத்குமார்.
மு.க.அழகிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அது தந்தை மகனுக்குமான பிரச்சினை போலத்தான் தெரிகிறது. திமுகவின் உட்கட்சி விவகாரம் இது. அழகிரி நீக்கத்தால் திமுக பலவீனமடையாது. காரணம் ஏற்கனவே அது பலவீனமாகத்தான் இருக்கிறது என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications