குழந்தை இல்லாமல் தவித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் “டூயல்” சந்தோஷம்!
சென்னை: கடந்த இரண்டு வருடங்களாக குழந்தைப் பேறுக்காக கடுமையாக போராடி வந்த சென்னையைச் சேர்ந்த லட்சுமி இப்போது இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சந்தோஷப் பூரிப்பில் திளைத்துள்ளார்.
29 வயதான லட்சுமி நல்ல முறையில் கருத்தரிக்க டாக்டர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகள் பலன் கொடுத்து, அவரது பிரசவமும் நல்லமுறையில் நடந்தேறியுள்ளது.
இருப்பினும் அதி நவீன தொழில்நுட்பம் மூலம்தான் இது சாத்தியமாகியுள்ளது. லட்சுமி கருத்தரிப்பதில் சிரமம் ஏற்பட மரபணு குறைபாடே காரணம் என்பதை அறிந்த டாக்டர்கள், அந்த குறைபாட்டை கருமுட்டை அளவில் சரி செய்து குழந்தைப் பேறை சுலபமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரசவம் பார்த்த பிரபல மகப்பேறு மருத்துவரும், செயற்கை கருத்தரித்தலில் முன்னோடியுமான டாக்டர் பிரியா செல்வராஜ் கூறுகையில், வழக்கமாக பல கரு முட்டைகளை நாங்கள் உருவாக்குவோம்.
அதில் சிறந்ததை கர்ப்பப் பையில் விடுவோம். மேலும் இதற்கு முன்பு குரோமோசோம் அளவில் கரு முட்டையை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. தற்போது அது கை கூடியுள்ளது. எனவே இந்த கரு முட்டையில் ஏற்பட்டிருந்த மரபணு குறைபாட்டை சரி செய்ய வழி கிடைத்தது என்றார்.
லட்சுமிக்குத் திருமணமாகி 2 வருடங்களாகிறது. ஆனால் அவர் கருத்தரிக்க முடியாமல் சிரமப்பட்டார். ஒரு்முறை அபார்ஷன் ஆகி விட்டது. இதையடுத்து அவர் டாக்டர் பிரியா செல்வராஜின் ஜிஜி மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை டாக்டர்கள் பரிசோதிததபோது, முதலில் அவரிடம் குறைபாடு எதுவும் தெரியவில்லை. இதையடுத்து இயற்கையாக கருத்தரிக்க 6 மாத அவகாசம் தர முடிவு செய்தனர். அதன் பின்னரும் அவருக்கு கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படவே சோதனைக் குழாய் கருத்தரித்தல் அணுகப்ட்டது.
ஆனால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் லட்சுமி நம்பிக்கை இழந்தார். ஆனால் டாக்டர்கள் அவருக்கு நம்பிக்கை கொடுத்தனர். அதன் பின்னர்தான் மரபணு பிரச்சினை இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். அவை அளவில் வேறுபடும். ஒரு குரோமோசோமில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஜீன்கள் இடம் பெற்றிருக்கும்.
முதலில் லட்சுமியின் கரு முட்டையிலிருந்து ஒரு செல்லை மட்டும் பிரித்து எடுத்தனர். அதில் குறைபாடுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனர். அதன் பின்னர் குறைபாட்டை சரி செய்து பின்னர் மீண்டும் அதே கரு முட்டையில் அந்த செல்லை சேர்த்தனர்.
இதையடுத்து வழக்கமான முறையில் கரு வளர்ச்சி இருந்தது. 3வது மாதத்தில், லட்சுமிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கப் போவதா டாக்டர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு லட்சுமியும், அவரது கணவரும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
இந்த இரட்டைக் குழந்தைகளும் (ஒரு பையன், ஒரு பெண்) நேற்று நல்ல முறையில் பிறந்துள்ளன. இரு குழந்தைகளும் தலா 2 கிலோ எடைக்கு மேல் உள்ளன. ஆரோக்கியமாகவும் உள்ளன.
இந்தப் புதிய முறை குறித்து டாக்டர் பிரியா கூறுகையில், இது எல்லாப் பெற்றோருக்கும் செய்ய முடியாது. செலவு அதிகம். அதேசமயம், எல்லோருக்கும் இது பொருந்தும் என்றும் கூற முடியாது. இதுதான் இதன் ஒரே பிரச்சினை என்றார்.
இப்பிரசவத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான டாக்டர் பிரியா செல்வராஜ் , டாக்டர் கமலா செல்வராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.