ஆதரவை வாபஸ் பெற்ற பின் தவ்ஹீத் ஜமாத்துக்கு ஜெயலலிதா திடீர் நன்றி!
நாமக்கல்: கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா திடீரென 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு நன்றி' என்று கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு வாபஸ் என்று அறிவித்த பின்னர் ஜெயலலிதா இவ்வாறு கூறுவது யாரை ஏமாற்ற என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெய்னூல் ஆபுதீன் கூறுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் பாஜவை விமர்சிப்பதே இல்லை. பாஜக தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதை அவர் கண்டிக்கவும் இல்லை.
பாஜவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ஆனால், பாஜவின் தேர்தல் அறிக்கை குறித்து ஜெயலலிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்கிறோம். யாருக்கு ஆதரவு என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து கரூர் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, திடீரென காங்கிரசோடு சேர்த்து பாஜகவையும் தாக்கினார். அதுவும் காவிரி விஷயத்தில்.. பாஜகவை நேரடியாகத் தாக்காமல் காங்கிரசோடு சேர்த்து போகிற போக்கில் தாக்குதல் தொடுத்தார்.
மேலும் இக் கூட்டத்தில் பேசுகையில், 'கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு நன்றி' என்றரீதிலும் பேசினார். இதை நேற்று நாமக்கல்லில் நடந்த பொதுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய ஸ்டாலின், அதிமுகவுக்கு தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தவ்ஹீத் ஜமாத் அறிவித்த பின்னர் திடீரென அவர்களை கூட்டணிக் கட்சி என்றும், அவர்களுக்கு நன்றி என்றும் ஜெயலலிதா சொல்கிறார்.
அவர்கள் அதிமுக அணிக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றது கூட ஒரு முதல்வருக்குத் தெரியாதா?. யாரை ஏமாற்ற இது மாதிரி பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.