சசிகலா நினைத்திருந்தால் டிச.5ம் தேதியே முதல்வராகியிருக்கலாம்: டிடிவி தினகரன் ஆவேசம்
சென்னை: மேலூர் கூட்டத்தில் என்ன அறிவிப்பு வெளியிடுவார் தினகரன் என்ற எதிர்பார்ப்பால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு நிலவும் நிலையில் எடப்பாடி அணியை வறுத்தெடுத்தார் அவர்.
எடப்பாடி அணிக்கு எதிராக மோதல் முற்றிய நிலையில் மேலூரில் இன்று முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டிடிவி தினகரன். இதனால் அரசுக்கு எதிராக என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தொற்றியது.
தினகரன் அப்படி எதையும் மோதல் போக்கை தூண்டும் வகையிலான பேச்சை தவிர்க்க வேண்டும் என்ற பதற்றம் அரசு வட்டாரத்தில் உள்ளது. இக்கூட்டம் தொடங்கும் முன்பு, அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி அந்த பதற்றத்தை உறுதி செய்துள்ளது. அரசை கலைத்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள், அவசரப்பட கூடாது என்றெல்லாம் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தினகரன் அதிரடியாக பேசினார். சசிகலா நினைத்திருந்தால் டிச.5ம் தேதியே முதல்வராகியிருக்க முடியும். எங்கள் குடும்பத்தில் என்னையோ அல்லது வேறு யாரையாவது முதல்வராக்கியிருக்கலாம். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை. எங்கள் குடும்பம் அதிகாரத்திற்கு ஆசைப்படும் குடும்பம் இல்லை. அதிமுகவை நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் செய்ய வேண்டிய கட்டாயம் கழகதுணை பொதுச்செயலர் என்ற வகையில் எனக்கு இருப்பதால்தான் இக்கூட்டத்தை நடத்துகிறேன். அதற்கு ஆட்களை வரவிடாமல் அரசே தடுக்கிறது என புகார்கள் வருகிறது. அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பாவச்செயலரா?
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது ஆட்சியை கவிழ்க்கும் செயலா?
கூவத்தூரில் அப்படியே எம்எல்ஏக்களை விட்டுச்சென்றிருந்தால் இவர்கள் இப்படி கார்களில் பவனி வர முடியாது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.