சட்டசபையிலும் அதிமுகவினர் சின்னம்மா, குட்டியம்மா புராணம் பாடுகிறார்கள்.. ஸ்டாலின் காட்டம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, சின்னம்மா, குட்டியம்மா என சட்டசபையில் புகழ்ந்துரைத்து வருவது அதிமுகவினர் வாடிக்கையாகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்ட சபையில் ஆளுநர் உரை மீது, நேற்றைய தினம் நிகழ்த்திய உரையில் இருந்த ஒரு வார்த்தை, இன்று அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து, அவர் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "நேற்று சட்டசபையில் ஆளுநர் உரை மீது நடைபெறக்கூடிய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன். அப்போது நான் எடுத்துச் சொன்ன ஒரு வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கைத்தறி துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டுச் சொல்லி, அதோடு நிறுத்தாமல், 'விஷத்தை கக்கியிருக்கிறேன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி சபாநாயகரிடத்தில் அவர் எடுத்து வைத்து, அதனைத் தொடர்ந்து சபாநாயகர், நான் எடுத்து வைத்திருந்த உரையில் இருந்து ஒரு வார்த்தையை நீக்கினார்.

பட்டுப்போய்
எனது உரையில் நான் எடுத்து வைத்திருந்த வார்த்தை 'தமிழகத்தை பொறுத்தவரை நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய் ஆண்டுகள் பல ஆகி விட்டன' என்பது. அப்போது, 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது, அது அவையில் பயன்படுத்தக் கூடாதது என்ற நிலையில், அதனை நீக்கினார்கள். இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தோம். உடனே அதற்கு சபாநாயகர் 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நீக்குகிறோம், அதேபோல அமைச்சர் என்னை 'விஷத்தை கக்குகிறார்' என்று சொன்ன சொல்லையும் நீக்குகிறோம் என்று தீர்ப்பளித்தார்.

அவைக்குறிப்பு
அதன் பிறகு நாங்கள் இதை பெரிய பிரச்னையாக ஆக்காமல், சட்டசபையில் இன்று காலையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, பூஜ்ய நேரத்தை பயன்படுத்தி, 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நீங்கள் நீக்கியது சரியல்ல, 'விஷத்தை கக்குகிறார்' என்ற வார்த்தையையும் கூட அவைக்குறிப்பில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் னவே, 'பட்டுப்போய்' என்ற வார்த்தை சட்டசபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையல்ல. அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருக்க வேண்டும், என்றுநான் வலியுறுத்தி, கேட்டேன்.

ஜெயலலிதா பேசினார்
இதே சட்டப்பேரவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதைவிட மோசமாக பேசியிருக்கிறார். நானாவது, 'நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய்' என்று சொன்னேன். ஆனால் ஜெயலலிதா பேரவையில் பேசுகிறபோது, ‘திமுக அரசு தமிழ்நாட்டை அதாள பாதாளத்திற்கு அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது' என்று சொல்லி, அது அவைக்குறிப்பிலும் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இது ஒன்றுமே அல்ல. எனவே, அது சபைக்குறிப்பில் இருக்க வேண்டுமென்று நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தினோம். சபாநாயகர் கேட்க வில்லை. ஆகவே, இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல், எங்கள் கண்டனத்தை இதற்கு தெரிவிக்கும் வகையில், வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆர் இன்னும் ஆவேசம்
அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இதே அவையில், ‘சட்டமன்றம் செத்து விட்டது', என்றார். 'ஆட்சியல்ல, நிர்வாகமல்ல, சட்டமன்றமே செத்து விட்டது என்று அவர் சொன்னது இன்றும் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. பட்டுப்புடவை என்று சொல்கிறோம், பட்டுப்பாவாடை என்று சொல்கிறோம், பட்டு வேட்டி, பட்டுச்சட்டை என்று சொல்கிறோம், அதெல்லாம் அவைக்குறிப்பில் இருக்கக்கூடாதா? 'கேட்டுக் கொள்ளப்பட்டு, தெரிவிக்கப்பட்டு' என்பவற்றிலும் 'பட்டு' வருகிறது. இதெல்லாம் இடம்பெறக்கூடாதா என்பது தான் என்னுடைய கேள்வி.

சின்னம்மா, பெரியம்மா
ஆனாலும் நாங்கள் எங்களுடைய சட்டமன்ற ஜனநாயக கடமை மற்றும் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய மரபில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய கட்சியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களை எல்லாம் நான் கண்டிப்போடு கூறி இருக்கிறேன், 'கேள்வி நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது, பிரச்னைகளை மட்டும் தான் பேச வேண்டும்' என்று சொல்லி இருக்கின்றேன்.

மீண்டும் சென்றனர்
பலமுறை இதை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்த சபை அப்படி நடைபெறவில்லை. இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்ற நாங்கள் மீண்டும் சபைக்கு செல்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவைக்குள் சென்று தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.












Click it and Unblock the Notifications