பிரதோச தினத்தில் நேர்காணலுக்கு ஜெ. அவசர அழைப்பு... யாருக்கு சீட்? லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில் நேற்று மீண்டும் தொடங்கியது.
முக்கிய அமைச்சர்கள் கொண்ட அதிமுக குழு வேட்பாளர்களுக்கான நேர்காணலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்க ஏராளமான அதிமுக நிர்வாகிகள் போயஸ்கார்டனில் குவிந்துள்ளனர். முதல் நேர்காணலை தேய்பிறை பிரதோச தினத்தில் நடத்திய ஜெயலலிதா, சில நாட்கள் ஓய்வுகக்குப் பிறகு வளர்பிறை பிரதோச தினமான நேற்றும் நேர்காணலை நடத்தினார்.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. பின்னர் திமுக, தேமுதிகவில் மும்முரமாக நேர்காணல் நடத்தப்பட்டது. தேமுதிக, திமுக, பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் நேர்காணலை முடித்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரையில் மொத்தம் 26,174 பேர் விருப்ப மனுக்களைக் கொடுத்திருந்தனர். இதில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்பதற்காக 7,936 பேர் மனு கொடுத்திருந்தனர். ஆனால் விருப்ப மனு கொடுத்தோரிடம் எப்போது நேர்காணல் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
கடந்த மார்ச் 7ம் தேதி திடீரென அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 5 பேரிடம் திடீரென நேர்காணல் நடத்தினார். அமாவாசைக்கு முந்தைய தேய்பிறை பிரதோச தினத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
ஏற்கனவே லிஸ்ட் ரெடியாகி விட்டது என்றும் நேர்காணல் என்பது சம்பிரதாயமாகவே நடத்தப்பட்டது என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வளர்பிறை பிரதோச தினமான நேற்று மீண்டும் ஜெயலலிதா நேர்காணலை நடத்தினார்.
சீட்டுக்கு பணம்
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரிடமும், அவர்களது ஆதரவாளர்கள், உறவினர்கள் மூலம் சீட் கேட்டு பல கோடி ரூபாய் வழங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி உளவுத்துறை நடத்தி விசாரணை நடத்தியதில் உண்மை என்று தெரியவந்தது.
ஆதரவாளர்களுக்கு கல்தா
இதையடுத்து மூன்று அமைச்சர்களின் ஆதரவாளர்களிடம் இருந்த கட்சி பதவிகளை ஜெயலலிதா கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பறித்து வருகிறார். மேலும், ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மூன்று பேரும் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த மோசடி தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெ. நேர்காணல்
இந்த நிலையில் பிரதோச தினமான நேற்று அதிமுக சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள 25 தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த 50 பேரை மட்டும் சென்னை வரும்படி ஜெயலலிதா சார்பில் திடீரென அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
போயஸ் தோட்டத்திற்கு அழைப்பு
அதன்படி, இரவோடு இரவாக புறப்பட்டு நேற்று காலையிலேயே இந்த 50 பேரும் சென்னை வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று மதியம் 12 மணிக்கு போயஸ் கார்டன் சென்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.
இன்றும் நேர்காணல்
சென்னையில் போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த நேர்காணலை அடுத்து, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் இருந்து மூன்று பேர்வரை அழைக்கப்பட்டுள்ளனர். ஒருசில தொகுதிகளில் இருந்து ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? யார்?
நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி: கல்லூர் வேலாயுதம்
பாளையங்கோட்டை : தமிழ்மகன் உசேன்
நாங்குநேரி : எம்.விஜயகுமார்
ராதாபுரம் - பால்துரை
ஆலங்குளம் - எப்.சி கார்த்திக்கேயன்
தென்காசி - செல்வமோகன்தாஸ்
கடையநல்லூர் - குட்டியப்பா என்ற முரளி
வாசுதேவநல்லூர் - வக்கீல் அருள்ராஜ்
சங்கரன்கோயில் - மாரிச்சாமி
குமரி மாவட்டம்
நாகர்கோவில் - பாரதி சாம்சன்
குளச்சல் - சிவ. செல்வராஜன்
பத்மநாபபுரம் - ஜெங்கின்ஸ்
கிள்ளியூர் - மேரி கமலாபாய்
விளவங்கோடு - ஆஷா பாண்டியன்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி - நாகப்பட்டி ராமனுஜ கணேஷ்
விளாத்திக்குளம் - டாக்டர் சந்திரன்
ஒட்டப்பிடாரம் - மோகன்
திருச்செந்தூர் - வடமலைப்பாண்டியன்
வேலூர் மாவட்டம்
அணைக்கட்டு - வேலழகன்
ராணிப்பேட்டை - சுமைதாங்கி ஏழுமலை
ஆற்காடு - ராமதாஸ்
காட்பாடி - ராமு
வேலூர் - நீலகண்டன்
திருப்பத்தூர் - ஏ.ஆர். ராஜேந்திரன்
வாணியம்பாடி - நிலோபர் கபில்
ஆம்பூர் -பாலசுப்ரமணியன்
கே.வி.குப்பம் - ரமேஷ்
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் - முனியசாமி
பரமக்குடி (தனி) - பாலுச்சாமி
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் : மேயர் மருதராஜ்,
அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன்,
ஆத்தூர்: முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன்
சின்னாளப்பட்டி நகராட்சி தலைவர் முருகன்
நிலக்கோட்டை : வழக்கறிஞர் தங்கத்துரை,
முன்னாள் எம்.எல்.ஏ., தேன்மொழி, அவரது கணவர் சேகர்
நத்தம்: அமைச்சர் விஸ்வநாதன்
வேடசந்தூர்: டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ( முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்ரமணியன் மகன்)
சேர்மன் சுப்ரமணி
பழநி: முன்னாள் எம்.பி., குமாரசாமி
ஒட்டன்சத்திரம் : பாலசுப்ரமணியன்
பங்குனி உத்திரத்தில் லிஸ்ட்
நாளை 23ம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும், முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடவுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.