விசைப்படகு மோதலை தடுக்க தூத்துக்குடியில் ஏர் பேக் அறிமுகம்!
படகுகளை பாதுகாப்பாக கடலில் இறக்க தூத்துக்குடியில் ஏர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: படகுகளை பாதுகாப்பாக கடலில் இறக்க தூத்துக்குடியில் ஏர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளில் அடியில் சேதம் அடைவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இவற்றை பழுது பார்க்கவும், புதிய படகுகளை கட்டமைக்கவும் மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியில் போர்ட் யார்டு எனப்படும் பணிமனை உள்ளது.
இங்குள்ள பணிமனைகளில் புதிய படகுகள் தயாரிக்கப்பட்டு அவை கடலுக்குள் இறக்குவதற்காக இரும்பு உருளைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விசைப்படகுகளை கடலில் இறக்க நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகிறது. மேலும் விசைப்படகின் கீழ்பகுதி சேதம் அடைந்து விடுகிறது.
இவற்றை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் ராட்சத ஏர் பேக்குகள் அறிமுகம் ஆகியுள்ளது. சுமார் 8 மீட்டர் நீளமும், ஓன்றரை மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏர் பேக்குகள் உருளை வடிவில் உள்ளது.
அதிக எடையை தாங்கும் தன்மையுடன் நெகிழும் தன்மையும் இதற்கு உள்ளது. இதை போர்டு யார்டின் கீழ் சாதாரண பெட் சீட் போல் விரித்து அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு அவற்றின் மீது காற்று ஏற்றப்படுகிறது.
காற்றின் உதவியால் ஏர் பேக்குகள் உயர்ந்து படகுகளை தூக்கி விடுகிறது. பின்னர் படகு கிரேன் மூலம் நகர்த்தப்படுகிறது. முதல் ஏர் பேக் காற்று இறக்கப்பட்டு பின்னர் அடுத்தடுத்து ஏர் பேக்குகள் காற்று நிரப்பட்டு படகு கடலுக்கு வருகிறது. இதனால் படகின் அடிப்பகுதி சேதம் அடைவது தடுக்கப்பட்டுள்ளது.