நாராயணசாமியை மீண்டும் ஏர்போர்ட்டில் பார்க்க முடியுமா?
புதுச்சேரி: 6 முனை போட்டி நிலவும் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 'ஏர்போர்ட்' நாராயணசாமி எனப்படும் மத்திய அமைச்சர் நாராயணசாமி முக்கிய வேட்பாளராக கவனம் ஈர்க்கிறார்.
'அதோ வருகிறது, இதோ வருகிறது'...
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்றே புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என ஆறு கட்சிகள் போட்டியில் இருந்தாலும் மீடியாக்களில் அடிக்கடி தோன்றி 'அதோ வருகிறது, இதோ வருகிறது' என்று எதையாவது சொல்லி வந்ததால் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
ஏர்போர்ட் நாராயணசாமி
அதிலும் டெல்லியில் இருந்து வரும்போதோ அல்லது சென்னை டூ டெல்லி பிளைட்டில் ஏறப்போகும்போதோ ஏர்போர்ட்டில் வைத்து பேட்டியளித்து வந்ததால் பத்திரிகையாளர்கள் இவருக்கு ஏர்போர்ட் நாராயணசாமி என்று செல்லப்பெயரே வைத்துவிட்டனர்.
அணு உலை கட்டப்படும்போதே
கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டு வரும்போதே 'அடுத்த வாரம் அணு உலை செயல்படும்' என்று வாராவாரம் கூறிவந்ததால் 'அடுத்த வாரம் நாராயணசாமி' என்ற பட்டப்பெயரும் இவருக்கு சில நிருபர்களால் வழங்கப்பட்டது.
கட்சிக்கு அவரது பங்களிப்பு அதிகம்
இணை அமைச்சராக இருந்தபோதுதான், இப்படி அவரை வைத்து அரசியல் காமெடி செய்தார்கள். ஆனால் கட்சிக்கு அவரது பங்களிப்பு அதிகம். காங்கிரஸ் கட்சியில் நாற்பது ஆண்டுகளாக இருக்கும் நாராயணசாமி, மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாராயணசாமி தற்போதைய சிட்டிங் எம்பி என்பதும் தொகுதி மக்களின் நல்ல அறிமுகத்துக்கு காரணம்.
வாக்குகள் சிதறி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை
அதிமுக வேட்பாளர் ஓமலிங்கம், திமுக வேட்பாளர் ஏ.எம்.எச் நாஜிம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பாமக வேட்பாளர் அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் நாராயணசாமிக்கு சவால் விடும் வகையில் உள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரசும், பாமகவும் இங்கு நேருக்கு நேர் மல்லுகட்டுவதால் வாக்குகள் சிதறி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார், நாராயணசாமி.